வயநாடு நிலச்சரிவு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.36 லட்சம் நிதி!

வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.35.97 லட்சம் நிதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கேரள மாநிலம் வயநாட்டில் எதிர்பாராமல் பெய்த அதிகனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கடந்த மாதம் கேரள முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டது.

கேரள மக்களுக்கு உதவும் வகையில், நாடுமுழுவதும் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என மத்தியக்குழு தெரிவித்தது. அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், பொது மக்கள் வழங்கிய ரூ.35 லட்சத்து 97 ஆயிரத்து 611 தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மத்தியக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.