எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தியதன் பிறகு திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்: ஓபிஎஸ்!

விஜய்யின் அரசியல் வருகை தொடர்பாகவும், அவரின் கோட் திரைப்படம் குறித்தும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2022ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். அதிமுகவின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் அணிகள் இணைய வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் காட்டுவதால் அணிகள் இணைப்பு சாத்தியம் இல்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “பள்ளியில் ஆன்மீக பேச்சாளர் ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, தமிழகமும் மதச்சார்பற்ற சாதி வேறுபாடுகளற்றதாக உள்ளன. யாரையும், பிரித்துப் பார்த்து பேச கூடாது. சாதி, பேதம் அற்ற சமுதாயத்தில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

2026ஆம் ஆண்டு எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சிக்கு எத்தகைய இடையூறு வந்தாலும் அதனை வென்று அதிமுக அரியணையில் ஏறும் என்று தெரிவித்த அவர், “திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள்.திமுகவினர் மெஜாரிட்டியாக ஆட்சி நடத்தி வருவதால் வாரிசு அரசியல் நடத்த வேண்டும் என்ற நோக்கில் பேசி வருகின்றனர்” என்றார்.

விஜய் அரசியலில் ஜெயிப்பாரா என்ற கேள்விக்கு, “ஏற்கனவே மூன்று முறை கூறிவிட்டேன். விஜய் அரசியல் இயக்கம் தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

விஜய் நடித்த கோட் திரைப்படம் பார்த்தீர்களா என்று செய்தியாளர் கேட்க, எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தியதன் பிறகு திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என்று ஒரே போடாக பதில் அளித்தார்.

மேலும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள தமிழக முதல்வர் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருவார் என நம்புகிறேன், அவருக்கு எனது வாழ்த்துகள் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.