பாஜகவில் இருந்து விலகிய மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்!

பாஜகவில் இருந்து விலகிய அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பியுமான மைத்ரேயன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் பாஜகவில் இருந்த மைத்ரேயன் 2000ஆம் ஆண்டு அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 2001 சட்டமன்றத் தேர்தலில் மைலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பிறகு 2002ஆம் ஆண்டு மைத்ரேயன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றதன் காரணமாக தொடர்ந்து மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த மைத்ரேயன், 2019ஆம் ஆண்டு வரை அந்த பொறுப்பில் இருந்தார். மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவராகவும், அதிமுக மருத்துவரணியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு அவரை கண்டுகொள்ளாததால் அதிருப்தியில் இருந்தார். 2022ஆம் ஆண்டு ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவரை சந்தித்து மைத்ரேயன் ஆதரவளித்தார். இதனால் அவரை எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கினார்.

ஓபிஎஸ் அணியில் பயணித்த மைத்ரேயன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. ஆனாலும், பாஜகவில் அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை மைத்ரேயன் நேற்று திடீரென சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு பாஜகவில் சேர்ந்து அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த முன்னாள் எம்.பி டாக்டர் மைத்ரேயன் அக்கட்சியில் இருந்து விலகி, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து, தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை எடப்பாடி பழனிசாமி பரிசீலனை செய்து மைத்ரேயனை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார் என்றும் அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.