செந்தில் பாலாஜி வழக்கு: காவல்துறை பதிலை ஏற்க மறுத்த நீதிபதி!

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் விசாரணை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி அமர்வில் நடைபெற்று வருகிறது. இதில் ஜாமீன் வழங்க கோரிய மனு மீதான விசாரணையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், ஆகியவற்றில் நடைபெற்றது. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றும் நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011-15 அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது போக்குவரத்துக்கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடி செய்ததாக 3 குற்ற வழக்குகளை செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகள் சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி ஜெயவேல் முன்பாக நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 12) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்ற வழக்கின் விசாரணைக்கு தமிழக அரசின் பொதுத்துறையிடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. எனவே, அந்த அனுமதி கடிதம் பெற்று சமர்ப்பிக்க 3 வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும்,” என கோரப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, “கடந்த மாதமே அனுமதி கிடைத்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானதே, இனிமேலும் அவகாசம் கோருவதை ஏற்க முடியாது. மேலும், குற்ற வழக்கின் விசாரணைக்கு அரசின் அனுமதி கிடைக்கவில்லை என இன்னும் எத்தனை முறை தான் கூறிக்கொண்டே இருப்பீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

பின்னர் இந்த வழக்கை வரும் செப்டம்பர் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் இந்த வழக்கின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.