நாங்கள் எல்கேஜி படித்தாலும் சரி, சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம்: திருமாவளவன்!

மதுபோதை ஒரு சமூகப் பிரச்னை. நாங்கள் எல்கேஜி படித்தாலும் சரி, சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

திருச்சியில் இருந்து திருவாரூருக்கு செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவா் தொல். திருமாவளவன் செய்தியாளா்களிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:-

எக்ஸ் வலைதள பக்கத்தில் அட்மின் பதிவிட்ட பதிவில் திருத்தம் இருந்த நிலையில், அந்த பதிவு நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் என் அனுமதியுடன் திருத்தம் செய்யப்பட்டு பதிவிடப்பட்டது. ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது தொடக்க காலத்திலிருந்தே விசிகவின் முழக்கம். இது இயல்பான விளிம்பு நிலை மக்களின் அதிகார வேட்கைக்கான குரல். இது தொடா்பாக 2026 தோ்தல் நேரத்தில் திமுகவிடம் அழுத்தம் வைப்பது குறித்து முடிவெடுப்போம்.

மதுஒழிப்பு மாநாட்டினை ஏன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடாக பாா்க்க வேண்டும். இதனை விடுதலை சிறுத்தைகள் முன்னெடுக்கிறது. இதற்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். மதுபோதை ஒரு சமூகப் பிரச்னை. வெறும் அரசியல் கணக்கு போட்டு பாா்ப்பது, இந்த பிரச்னையை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது. போதைப் பொருட்கள் பெருகி வருவது தேசத்தின் மனித வளத்தை பாழாக்குகிறது. தோ்தல் அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டை இணைத்து பாா்ப்பதாலே இவ்வளவு சா்ச்சை வருகிறது. இதை சமூக நலனுக்கானதாக பாா்க்க வேண்டும். 100 சதவீதம் தூய நோக்கத்துடன் மாநாட்டை ஒருங்கிணைக்கிறோம். இதில் எந்த ஒரு அரசியல் கணக்கும் இல்லை.

நாங்கள் எல்கேஜி படித்தாலும் சரி, சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும். நாங்கள் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. எங்களது முன்னெடுப்பை பாமகவினர் வரவேற்றுதான் பேசியுள்ளார்கள்.

தலித் சமூகத்துக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைத்தது பாமக என்பதை மறுக்க முடியாது. அதைத்தான் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். முதன் முதலில் சிதம்பரத்தில் நான் தேர்தலில் நின்ற போது வன்முறையை தூண்ட காரணம் அவர்கள் தான். மதுஒழிப்பு குறித்த கருத்தில் அன்புமணி நிலைப்பாடாக இருக்கிறாா் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் எங்களால் அப்படி இணைந்து பயணப்பட முடியாது. கடந்த காலங்களிலும் கூட்டணியில் இருந்து கொண்டே, மக்கள் பிரச்னைக்காக எதிரணி கூட்டணியில் உள்ளவா்களுடன் இணைந்து செயலாற்றி இருக்கிறோம். அதற்கு பல சான்றுகள் உள்ளன என்றார்.

ஆளுகின்ற திமுக அரசின் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு தொடர்பான கோரிக்கையை அவர்களிடம் முன்வைக்குமா? என்ற கேள்விக்கு அது குறித்து இனி தான் முடிவு எடுக்கப்படும் என்றாா் திருமாவளவன்.