2025 பிப்ரவரி மாதத்திற்குள் அதிமுக ஒன்றிணையும்: வைத்திலிங்கம்!

2025 பிப்ரவரி மாதத்திற்குள் அதிமுக ஒன்றிணையும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய நால்வர் அணியில் ஒருவராகவும் இருந்தவர் வைத்திலிங்கம். 2016 சட்டமன்றத் தேர்தலில் வைத்திலிங்கம் தோல்வியைத் தழுவினாலும், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரும் அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றிருந்தவர். ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்தபோது துணை ஒருங்கிணைப்பாளர் என்கிற முக்கிய பொறுப்பு வைத்திலிங்கம் வசம் வந்தது. ஆனால், தஞ்சை மாவட்ட அரசியலில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அமைச்சர்களின் தலையீடு இருந்ததால் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போது அவருக்கு ஆதரவாக செயல்பட்டதால் வைத்திலிங்கமும் நீக்கப்பட்டார்.

ஓபிஎஸ் தரப்பு அதிமுக பெயர், கொடி உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. தற்போது மக்களவைத் தேர்தல் அதிமுக தோல்வியை சந்தித்ததால் மீண்டும் அணிகள் இணைப்பு கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், “எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக, தமிழகத்தை மீண்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்பது பெரும்பான்மை தொண்டர்களின் விருப்பம். அணிகள் இணைய உள்ள சூழலில் யார் மீது குறை சொல்ல விரும்பவில்லை. 2025 டிசம்பர் மாதத்திற்குள் அதிமுக அணிகள் இணையும் என்று சொல்லியிருந்தேன். இப்போது சொல்கிறேன். 2025 பிப்ரவரி மாதத்திற்குள் அணிகள் இணையும். அதிமுக வலிமை பெற்று 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “நாங்கள் அதிமுகவின் உரிமை மீட்புக் குழுவாக செயல்பட்டு வருகிறோம். தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அந்த விதியை சர்வாதிகாரத்தனமாக மாற்றியுள்ளனர். நான் பேசுவது இணைப்புக்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக மேலும் கருத்துக்களை கூறவில்லை. என்னைவிட அதிமுக குறித்து பேச வேறு யாருக்கும் தகுதியில்லை” என்று கூறினார்.

மேலும், நான் அதிமுக கரை வேட்டியை கட்டுகிறேன். முடிந்தால் என் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றும் ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.