படகில் எல்லை தாண்டிய இலங்கையைச் சேர்ந்த மூவர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நடுக்கடலில் படகில் எல்லை தாண்டிய இலங்கையைச் சேர்ந்த மூவரை இந்திய கடலோர காவல் படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து 20 நாட்டிகல் தொலைவில் கடலோர காவல்படையைச் சேர்ந்த ரோந்து கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, இலங்கை கடற்பகுதியிலிருந்து இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்த ஒரு பைபர் படகினை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து படகிலிருந்த மூன்று இலங்கையைச் சேர்ந்தவர்களை கைது செய்து ஞாயிறு இரவு மண்டபம் கடலோர காவல்படை முகாமுக்கு கொண்டு வரப்பட்டனர். விசாரணைக்கு பிறகே மூவரும் அகதிகளா, மீனவர்களாக அல்லது கடத்தல்காரர்களாக என்பது குறித்து தெரியவரும்.