திமுக முப்பெரும் விழாவில் ஏஐ தொழில்நுட்பத்தில் பேசிய கருணாநிதி!

திமுகவின் முப்பெரும் விழாவில், கருணாநிதியை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பேச வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி நாற்காலி ஒன்றில் அமர்ந்திருப்பது போலவும் காட்சிப்படுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளனர். இதனை திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையேற்றார். இந்நிலையில் விழாவின் முதல் வரிசையில் இரண்டு பெரிய இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதன் மீது தொடக்கம் முதலே பெரிதும் ஆர்வம் இருந்தது. ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்து கொண்டால் மற்றதில் யார் அமருவார் எனக் கேள்வி எழுந்தது. இந்நிலையில் விழா தொடங்கிய நிலையில், ஸ்டாலினுக்கு அருகில் உள்ள இருக்கையில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியை அமர வைத்துள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக கருணாநிதி பேசியது திமுக தொண்டர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது. தனக்கே உரிய பாணியில் ”என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற பேசத் தொடங்கியதும் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து பேசுகையில், தந்தை பெரியார் வகுத்த கொள்கையை, பேரறிஞர் அண்ணா வகுத்த பாதையை ஓங்கி ஒலிக்க செய்து கம்பீரமாக கட்சியை ஆட்சி பொறுப்பில் அமர செய்திருக்கும் தம்பி மு.க.ஸ்டாலினை எண்ணி எண்ணி என் நெஞ்சும் பெருமிதம் கொள்கிறது. ஸ்டாலின் என்றாலே உழைப்பு, உழைப்பு, உழைப்பு தான். 55 ஆண்டுகளாய் அயராது உழைக்கிறவர். திராவிட செம்மலாய், இந்தியாவின் முன்மாதிரி முதல்வராய் விளங்குகிறார். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி ஆகியவற்றின் பாதையில் கழக ஆட்சியை அவர் மிகச் சிறப்பாக வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார்.

இனமானம், மொழி மானம், சுயமரியாதை ஆகியவற்றை கண் போல் காக்கும் அவரது கடமையை கண்டு நான் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். வாழ்க பெரியார், அண்ணா புகழ், ஓங்குக திராவிட ஆட்சி என்று கருணாநிதி ஏஐ தொழில்நுட்பம் பேசினார். இதை கேட்ட கழகத்தினர் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். இதையடுத்து திமுக சார்பில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் பெயரிலான விருதுகள் வழங்கப்பட்டன.