அனைத்து குடியிருப்புகளின் தரத்தையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்: டி.டி.வி தினகரன்!

தரமற்ற குடியிருப்புகளை கட்டும் ஒப்பந்ததாரர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயளாலர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் மற்றும் சின்னப்பள்ளிக் குப்பத்தில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளின் மேற்கூரை இடிந்து விழுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கைத் தமிழர்களுக்காக வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசு கட்டித்தந்த 236 குடியிருப்புகளில் பல குடியிருப்புகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால் அதில் வசிப்போரின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

ரூ.12.42 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை மேளதாளங்கள் முழங்க உற்சாகத்துடன் வந்து திறந்துவைத்த அமைச்சர்கள், அந்த குடியிருப்புகளின் தரம் குறித்து முறையான ஆய்வு செய்யாதது ஏன்?
எனவே, தரமற்ற குடியிருப்புகளை கட்டிய ஒப்பந்ததாரர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் கட்டப்படும் அனைத்து குடியிருப்புகளின் தரத்தையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.