பாஜக – ஆர்எஸ்எஸ் இந்தியா முழுவதும் வெறுப்பு, வன்முறையைப் பரப்புகிறது: ராகுல் காந்தி

“பாஜக-வும் அதன் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ்-ம் நாடு முழுவதும் வெறுப்பையும், வன்முறையையும் பரப்புகிறது” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:-

பாஜக-வும் அதன் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ்ஸும் நாடு முழுவதும் வெறுப்பையும், வன்முறையையும் பரப்புகின்றது. அவர்கள் எங்கு சென்றாலும் சாதி, மதங்கள், மாநிலங்கள் மற்றும் மொழிகளுக்கு இடையே பிளவுகளை உருவாக்கி, மோதலை தூண்ட முயற்சிக்கின்றனர். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வெறுப்பைப் பரப்புவதுதான். வெறுப்புக்கு பதில் வெறுப்பு அல்ல. வெறுப்பை அன்பால் மட்டுமே வெல்ல முடியும். ஒருபுறம் வெறுப்பைப் பரப்புபவர்கள் இருக்கிறார்கள். மறுபுறம் அன்பை விதைக்க நாங்கள் இருக்கிறோம்.

பஹாரி மற்றும் குஜ்ஜார் சமூகத்தினரிடையே பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. அக்கட்சியின் இந்த திட்டம் தோல்வி அடையும். இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு, மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதே எங்களின் முதல் கோரிக்கை.

ஜம்மு-காஷ்மீர் மக்கள் தங்களின் தேவைகளை வலியுறுத்தினால் மட்டுமே போதுமானது, மக்கள் ஆட்சியாளர்கள் தங்களுக்கு என்ன பணி செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்களோ அதைச் செய்வேன். நாடாளுமன்றத்திலும் இது குறித்து பேசத் தயாராக இருக்கிறேன். அனைவரும் சமம் ஆனவர்கள். காங்கிரஸ் நாட்டு மக்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கும்.

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் பலம் பெற்றுள்ளன. அரசின் மக்கள் விரோத சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளன. நரேந்திர மோடியை நாங்கள் உளவியல் ரீதியாக அசைத்துவிடோம். அவர் நம்பிக்கை இழந்துவிட்டார் என்பது அவரது முகத்திலேயே வெளிப்படையாகத் தெரிகிறது. அவர் முன்பு இருந்தது போல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.