ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்!

75 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு: பிரதமர் மோடிக்கு அது பொருந்துமா? ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இருந்து பா.ஜனதா வெளியேறுகிறதா? என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 22-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு 5 கேள்விகள் விடுத்தார். இந்நிலையில், நேற்று அவர் மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதினார். அதில் மீண்டும் 5 கேள்விகளை எழுப்பி உள்ளார். இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

பா.ஜனதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். தேவையில்லை என்று பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா கூறியது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

75 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற பா.ஜனதா விதிமுறை, அத்வானி, ஜோஷி ஆகியோருக்கு பயன்படுத்தப்பட்டது. பிரதமர் மோடிக்கும் அது பொருந்துமா?

கட்சிகளை உடைக்கவும், எதிர்க்கட்சி அரசுகளை கவிழ்க்கவும் விசாரணை அமைப்புகளை பா.ஜனதா பயன்படுத்துவது உங்களுக்கு ஏற்புடையதுதானா?

ஊழல்வாதிகளை பா.ஜனதா சேர்த்துக் கொள்வதில் உங்களுக்கு உடன்பாடு உள்ளதா? ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இருந்து பா.ஜனதா வெளியேறுகிறதா?

இந்த கேள்விகள் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் உள்ளன. இவற்றுக்கு மோகன் பகவத் சிந்தித்து பதில் அளிப்பார் என்று கருதுகிறேன். பா.ஜனதாவின் அரசியல் இதேபோல் நீடித்தால், நாடும், ஜனநாயகமும் முடிவுக்கு வந்து விடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.