கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு!

எந்த தவறும் செய்யவில்லை என்பதால் தான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ‘முடா’ நில முறைகேடுதொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதனை பரிசீலித்த கவர்னர், கடந்த மாதம் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா, கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் அந்த மனு மீது விரிவாக விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிபதி நாகபிரசன்னா, சித்தராமையாவின் மனு நிராகரிக்கப்படுவதாகவும், கவர்னரின் உத்தரவு செல்லும் என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் முடா ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சித்தராமையாவும், 2வது குற்றவாளியாக அவரது மனைவி பார்விதியும் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, 3வது குற்றவாளியாக சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி, 4வது குற்றவாளியாக தேவராஜ் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மைசூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறியதாவது:-

அரசமைப்புச் சட்டத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர், மாநில நிர்வாகத்தில் தலையிடுவது சரியல்ல. நாட்டில் எங்கெல்லாம் எதிர்க்கட்சி ஆட்சி இருக்கிறதோ, அங்கெல்லாம் மத்திய அரசும் பாஜகவும், அமலாக்கத்துறை, சிபிஐ, ராஜ்பவன் அலுவலகம் ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படுவதற்காக ஆளுநர் நியமிக்கப்படுகிறார். எந்த தேர்தல் மூலமும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அரசியலமைப்பில் அந்த பதவி முக்கியமானது. ஆனால், மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆட்சிக்கு வருகிறார்கள். இவ்வளவு முக்கியமான வேறுபாடு இருக்கும்போது எந்த மாநில ஆளுநரும் மாநில நிர்வாகத்தில் தலையிடுவது சரியல்ல. இந்த விவகாரத்தில் நாடு தழுவிய விவாதம் நடத்தப்பட வேண்டும்.

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) வழக்கு சட்டப்படி நடத்தப்படும். இதுபோன்ற முறைகேடு வழக்கு என் மீது பதிவு செய்வது இதுவே முதல்முறை. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. நீதி என் பக்கம் இருக்கிறது. இதை எதிர்கொண்டு வெற்றி பெறுவேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆசியைப் பெற்று காங்கிரஸ் அரசு நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறது. ஐந்தாண்டு காலத்தில் மாநிலத்தை மேம்படுத்த மக்கள் ஆணை இட்டுள்ளார்கள். இதில் ஆளுநர் தலையிடக்கூடாது. தலையிட்டால் தவிர்க்க முடியாமல் எதிர்க்க வேண்டி வரும்.

நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. ஜாமீனில் இருக்கும் குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டாரா? நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு ராஜினாமா செய்தாரா? காங்கிரஸ் அரசை விமர்சிக்க பாஜக தலைவர்களுக்கு தகுதி இல்லை. ஆபரேஷன் தாமரை மூலம் கர்நாடக அரசை சீர்குலைக்க பாஜக முயன்றது. அந்த முயற்சி தோல்வியடைந்தது. அதனால் இப்போது பொய்யான குற்றச்சாட்டை பெரிதாக்குகிறார்கள்.

கர்நாடக பாஜகவில் தவறு செய்யாத, ஊழல் செய்யாத ஒரு தலைவர் உண்டா? பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும், ஆளுநரும் எங்களுக்கு எதிராக எவ்வளவு தொல்லை கொடுத்தாலும், ஏழைகளுக்கு ஆதரவான உத்திரவாத திட்டங்களை நாங்கள் நிறுத்த மாட்டோம். இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து எனக்கு ஆதரவு தெரிவித்தனர். மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அவர்களுக்காக எங்கள் அரசு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.