தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி இல்லை: ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுகவில் தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி சாத்தியமில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

ஏற்கெனவே நான் சொன்னதுபோல அதிமுகவில் தொண்டர்கள் சக்தி பிரிந்து கிடக்கிறது. தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி சாத்தியமில்லை. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டுப் பெற்று, 7இடங்களில் டெபாசிட் பறிபோய் இருக்கிறது. 13 இடங்களில் 3-வது இடத்துக்கு வந்திருக்கிறது. பிற தொகுதிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாமல் போனதற்குக் காரணம் தொண்டர்களை பிரித்து வைத்திருப்பதுதான். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவை கட்டிக் காத்ததுபோல, இந்த இயக்கத்தை மீண்டும் தொண்டர்கள் ஒன்றுசேர்ந்து கட்டிக்காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.