பொன். மாணிக்கவேலின் முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த உயர் நீதிமன்றம் மறுப்பு!

சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐஜி-யான பொன். மாணிக்கவேலின் முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.

தமிழக சிலை கடத்தல் பிரிவின் ஓய்வு பெற்ற ஐஜி-யான பொன்.மாணிக்கவேல் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. அப்போது, நான்கு வாரம் சென்னை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அவருக்கு நீதிபதி நிபந்தனை விதித்தார்.

இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி பொன்.மாணிக்கவேல் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி இன்று வியாழக்கிழமை விசாரித்தார். பின்னர் நீதிபதி, “செப். 14 முதல் நான்கு வாரங்களுக்கு சிபிஐ அலுவலகத்தில் கையெழுத்திட மனுதாரருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு வார காலம் வரை இந்த நிபந்தனையில் தளர்வு வழங்க முடியாது. விசாரணை அக். 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.