கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி பாதிப்பு!

கூடங்குளம் அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அணு உலைகளில் ஆண்டுதோறும் எரிபொருள் நிரப்பவும், பராமரிப்புப் பணிக்காகவும் மின்உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். மேலும், அவ்வப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் மின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது.

இந்நிலையில், முதலாவது அணு உலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று அணு மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.