மகாவிஷ்ணுவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!

மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனரான மகாவிஷ்ணு, மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக சைதாப்பேட்டை போலீஸார் கடந்த செப்.7-ம் தேதியன்று வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. எனது பேச்சு அவர்களை புண்படுத்தும் வகையி்ல் இருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். எனது பேச்சு எடிட் செய்து யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. எனது முழு பேச்சையும் கேட்காமல், தனக்கு எதிராக அரசியல் அழுத்தம் காரணமாக போலீஸார் பொய் வழக்கைப் பதிவு செய்துள்ளனர். போலீஸார் என்னை காவலில் எடுத்து விசாரித்த போதும் அவர்களின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். எனது அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி எஸ். கார்த்திகேயன், இந்த வழக்கில் கைதாகியுள்ள ஆன்மிகப் பேச்சாளரான மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.