இலங்கை அதிபர் திசாநாயக்க உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் புதிய அதிபர் அநுர திசநாயக்கவை சந்தித்து, இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பை அடுத்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இலங்கை அதிபர் அநுர திசநாயக்கவை, கொழும்பில் இன்று சந்தித்ததில் கவுரவம் கொள்கிறேன். இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்தேன். இந்தியா – இலங்கை உறவுகளுக்கான இலங்கை அதிபரின் அன்பான உணர்வும் வழிகாட்டுதலும் பாராட்டுக்குரியது. இரு நாடுகள் மற்றும் பிராந்திய மக்களின் நலனுக்காக, ஒத்துழைப்பை ஆழமாக்குவது மற்றும் இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது” என தெரிவித்தார்.

திசநாயக்க வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அரசு முறைப் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை வரவேற்றதில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பின்போது பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவின் ஆதரவை ஜெய்சங்கர் மீண்டும் உறுதிப்படுத்தினார். தொடர்ந்து இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம், பரஸ்பர நன்மை பயக்கும் விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமர் ஹரினி அமரசூர்ய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபர் ரணில் விக்கரமசிங்கே உள்ளிட்டோரையும் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.