இந்திய இளைஞர்கள் உயிரைப் பணயம் வைத்து வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர்: கார்கே

மோடி அரசால் நிகழும் வேலையின்மையால் இந்திய இளைஞர்கள், போர் நடக்கும் நாடுகளில் உயிரைப் பணயம் வைத்து வேலை பார்த்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போருக்கு மத்தியில், அப்பகுதிகளில் இந்திய இளைஞர்களை மோடி அரசின் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் அனுப்பியுள்ளது. 15000 இந்தியத் தொழிலாளர்களை, இஸ்ரேலில் போர் நடக்கும் பகுதிகளுக்கு அருகில் பணிபுரிய இந்தியா அனுப்பியுள்ளது. இதன்மூலம், பொய்யான வாக்குறுதிகள் அளித்து இந்திய இளைஞர்களை, போருக்கு மறைமுகமாக மோடி அரசு அனுப்பி வைத்துள்ளது. முன்னதாக, ரஷ்யா-உக்ரைன் போரில் சேர பொய்யான ஏஜென்டுகளின் அழைப்புகளின்பேரில் சென்ற இந்திய இளைஞர்கள், தங்கள் உயிர்களை இழந்தனர்.

போர் நடக்கும் பகுதி என்றாலும்கூட, வேலை செய்வதற்கு அதிக சம்பளம் கிடைப்பதால் இந்திய இளைஞர்கள் வேறுவழியின்றி அங்கு செல்கின்றனர். இது மோடி அரசால் இந்தியாவில் நிகழும் பரவலான வேலையின்மையின் விளைவேயாகும். உயிரைப் பணயம் வைத்து, போர் நடக்கும் பகுதிகளில் இந்திய இளைஞர்கள் வேலை பார்ப்பது, மோடி அரசின் வேலைவாய்ப்புகள் குறித்த கூற்றையும், அவரது தோல்வியையும் காட்டுகிறது. வேறுவழியின்றி போர்க்களங்களில் வேலை தேடும் ஹரியாணா இளைஞர்கள், நாளைய ஹரியாணா தேர்தலில் பாஜகவுக்கு பாடம் கற்பிப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஹரியாணா மாநிலத்தில் 90 உறுப்பினர்களைக் கொண்ட புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நாளை சனிக்கிழமை (அக். 5) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் வியாழக்கிழமை (அக்.3) பிரசாரம் நிறைவடைந்தது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள், அக்டோபா் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.