சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல: ஆளுநர் ஆர் என் ரவி!

சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல என்று, ஆளுநர் ஆர் என் ரவி வள்ளலார் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டின் ஆளுராக ஆர் என் ரவி பதவியேற்ற நாள் முதலே, அவருக்கும் திமுக கட்சிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. சிறிய போராட்டங்கள் முதல் முக்கிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்படுவது வரை இந்த மோதல் தொடர்கிறது. திமுக தலைவர்களும் பலமுறை ஆர்.என். ரவியை வேறு மாநிலத்திற்கு ஆளுநராக மாற்றி கோரியும், அவருக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனா். இதற்கிடையே சனாதனம், மதசார்பின்மை உள்ளிட்டவை குறித்து ஆர்.என்.ரவி அடிக்கடி பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இதற்கிடையே வள்ளலாரை சனாதனவாதி என்றும், வள்ளுவனுக்கு காவி சாயம் பூசியும் புதிய கட்டுக்கதைகளை உருவாக்கும் ஆளுநர் ஆர்என்.ரவிக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. ஆளுநரின் பேச்சுக்கள் அனைத்தும் திராவிட சிந்தனைக்கு எதிரானது என்றும் விமர்சனம் செய்தனா். எனினும் ஆளுநர் ரவி தொடா்ந்து தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், திமுகவுக்கு எதிராகவே கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

“கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சனாதனத்தை மலேரியா, டெங்கு என சிலர் விமர்சனம் செய்தனா். ஆனால் தற்போது அமைதியாக உள்ளனா்” என்று கூறி உள்ளார். இந்த பேச்சின் மூலம் உதயநிதி ஸ்டாலினை, ஆளுநர் ரவி மறைமுகமாக சாடி இருந்தார்.

இந்த நிலையில் வள்ளலாரின் பிறந்த நாள் நிகழ்ச்சி கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது வள்ளலார் தொடர்பான புத்தகத்தை வெளியிட்ட ஆளுநர் பேசுகையில், “:அனைவரும் ஒன்று என்பது தான் சனாதன தர்மம். சனாதன தர்மத்தில் வேறுபாடு கிடையாது. பெரியவர்கள், சிறியவர்கள் இல்லை. இதில் வேறுபாடு பார்த்து சிலர் குளிர்காய நினைக்கின்றனர். அதற்கு அவசியம் இருக்காது. சிலர் சனாதனத்தை சாதியோடு ஒப்பிட்டு பேசி தவறான புரிதலை உருவாக்குகின்றனர். சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல. வள்ளலார் வழியில் பிரதமர் மோடி இருக்கிறார். அவர் நாட்டின் வளர்ச்சி மற்றும் அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுகிறார்” என்று ஆளுநர் ரவி கூறி உள்ளார்.

ஆளுநர் ரவி எங்கு சென்றாலும், சனாதனம் குறித்து பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனா்.