லாலு பிரசாத், தேஜஸ்விக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கிய வழக்கில், முன்னாள் ரயில்வே துறை அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான லாலு பிரசாத் யாதவ், அவரது மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே, விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி குற்றம்சாட்டப்பட்டவர்கள் தலா ரூ.1 லட்சத்துக்கான சொந்த பத்திரம் வழங்க உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார். முன்னதாக, இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து லாலு பிரசாத், தேஜஸ்வி, தேஜ் பிரதாப் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி அமலாக்கத் துறை தாக்கல் செய்ய துணை குற்றப் பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அக்டோபர் 7-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப் புலனாய்வு முகமை பதிவு செய்ய வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது இந்திய ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பதவிகளுக்கு பல்வேறு நபர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு வேலை வழங்க லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.