திமுகவின் ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது: எஸ்.பி.வேலுமணி!

திமுகவின் கடந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தி இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். திமுக அரசுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து, மனித சங்கிலி போராட்டத்தில் பேசிய எஸ்.பி வேலுமணி கூறியதாவது:-

திமுக ஆட்சிக்கு வந்து 3.5 ஆண்டுகள் மக்களுக்கு எதையும் செய்யாமல் நடத்தி முடித்துள்ளனர். எடப்பாடி அற்புதமான ஆட்சியை நடத்தினார். கோவையின் வளர்ச்சிக்கு எடப்பாடிதான் காரணம். கேட்ட திட்டங்களை அனைத்தும் அள்ளிக் கொடுத்தவர் எடப்பாடி. ஆங்கிலேயர் ஆட்சியில் விதிக்கப்படும் அளவிற்கு வரி தற்போது விதிக்கப்பட்டு வருகிறது. பீக் ஹவர் கட்டணத்தினால் தொழில்கள் முடங்கி வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு தொழில்கள் கைமாறிவிட்டன. அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகாலம் ஆட்சியில் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை. திமுக ஆட்சியில் ஜோரக வசூல் நடக்கிறது. ஆனாலும் எந்த திட்டமும் நடக்கவில்லை. சாலைகள் சீரமைக்கப்படவில்லை. கோவைக்கு இத்தனை பாலங்கள் வர காரணம் எடப்பாடிதான். அனைத்து பாலங்களும் எடப்பாடியின் பெயரைத்தான் சொல்லும். எளிமையான முதல்வராக இருந்து பிரமாண்டமான திட்டங்களை கொடுத்தவர் எடப்பாடி. கோவை அரசு மருத்துவமனை அதிமுக ஆட்சியில் மேம்படுத்தப்பட்டது.

விமான நிலையம் விரிவாக்கம் செய்தால் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். ஆனால், அதனை இன்னும் திமுக செய்யவில்லை. ராகுல் காந்தி, மோடி என்று பார்த்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்கு செலுத்தியதால் திமுக வெற்றி பெற்றது. ஆனால், சட்டமன்ற தேர்தல் வந்தால் அதிமுக தான் ஆட்சிக்கு வரும். இனி 1 வருடம்தான் இந்த ஆட்சி. அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி தான் முதல்வர். திமுகவின் ஆட்சி மிகவும் கேவலமாக உள்ளது. எதையும் செய்யாமல் ஆட்சி நடத்தி வருகின்றனர். காவல் துறையின் கை கட்டப்பட்டுள்ளது. எங்கும் போதை பொருள் விற்கப்படுகிறது. வருங்காலமே அழிந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு எஸ்.பி. வேலுமணி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அனைத்து தரப்பு மக்களுக்கும் 100 சதவீத வரி உயர்வு என்பது பொருத்துக் கொள்ள முடியாதது. வருடா வருடம் உயர்வு என்பது மக்களை பாதிக்கும். கொரோனா காலத்தில் மக்களை கருத்தில் கொண்டு எடப்பாடி கட்டணத்தை எந்த கட்டணத்தையும் உயர்த்தவில்லை. மின் கட்டண உயர்வால் கோவையில் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு, மாநில அரசு தலையிட்டு தொழில்களை பாதுகாக்க வேண்டும். கடன்கள் வழங்கி தொழில்களை பாதுகாக்க வேண்டும். போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க வேண்டும். சாலைகள், பாலங்கள், அத்திக்கடவு அவிநாசி திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை எடப்பாடி கொடுத்தார். குறைந்தபட்சம் சாலையைவாது நீங்கள் போடுங்கள் என்றார்.

சென்னை விமான சாகசம் உயிரிழப்புகள் தொடர்பான கேள்விக்கு, கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வருவார்கள். பாதுகாப்பு கூடுதலாக கொடுத்திருக்க வேண்டும். காவல் துறை விழித்திருக்க வேண்டும். இந்நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு, கூடுதலான நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றார்.