மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்:உதயநிதி!

7 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை புனிதா, நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போன விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். நீட் சூழ்ச்சியால் தங்களுடைய அன்பு மகளை இழந்து தவிக்கும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் நீட் அநீதியால் எத்தனை உயிர்கள் போனாலும், ஒட்டுமொத்த தமிழ்நாடே ஒருமித்த குரலில் நீட் வேண்டாம் என்று சொன்னாலும், அதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாத ஒன்றிய அரசின் போக்கு, பாசிசத்தின் உச்சம்.7 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.