இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் இருப்பதாக மத்திய அரசு தகவல்!

இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தர பிரதேசத்தில் சம்பாவில் சமீபத்தில் நடந்த வன்முறை ஆகியவற்றை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அந்த கோரிக்கையை மத்தியஅரசு ஏற்கவில்லை. அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விவாதிக்க அனுமதி மறுப்பதாக கூறி அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் தடுப்பதாக குறிப்பிடும் வகையில் கருப்பு மாஸ்க் அணிந்தும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பேரணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. அப்போது அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது.

அப்போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வெளியுறவு இணையமைச்சர். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றிருந்த போது மீனவர் பிரச்சினை குறித்து விவாதித்தார். மீனவர்கள் தொடர்பான கூட்டு பணிக்குழு மூலம் தொடர்ச்சியாக இருதரப்பு சந்திப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை சிறையில் 486, பாகிஸ்தானில் 7, பஹ்ரைனில் 37 தமிழக மீனவர்கள் சிறையில் உள்ளனர் என நாடாளுமன்றத்தில் வெளியுறவு இணையமைச்சர் கீர்த்திவரதன் சிங் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.