ஆலோசனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ஆகியவை கட்சி தலைமையிடம் அனுமதி பெற்ற பின்பே நடத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மாவட்ட நிர்வாகிகள், தலைவர்கள், அணித் தலைவர்களின் கவனத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தி்ன தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி இனி வரும் காலங்களில் தங்கள் மாவட்டத்தில் நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டங்கள் பொதுக் கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கீழ்க்கண்ட வழிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும்.
முதலாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து, இரண்டாவதாக கொள்கைப்பாடல், மூன்றாவதாக உறுதிமொழி அதனை தொடர்ந்து தாங்கள் திட்டமிட்ட நிகழ்ச்சிகள். நிகழ்ச்சி நிறைவில் கழக கொடிப் பாடல் என மேற்சொன்ன அடிப்படையில் அனைத்தையும் பின்பற்ற வேண்டும். மேலும் தங்கள் மாவட்டம் சார்பில் நடத்தப்படும் ஆலோசனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ஆகியவை கட்சி தலைமையிடம் அனுமதி பெற்ற பின்பே நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.