சூடான் ராணுவ விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூடானின் தலைநகரான கர்தூம் அருகே உள்ள ஓம்துர்மானில் உள்ள வாடி ஜெய்ட்வானா ராணுவ தளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை ராணுவ விமானம் ஒன்று கிளம்பியது. அப்போது குடியிருப்பு பகுதியில் திடீரென விழுந்து விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இதில் 46 பேர் பலியானார்கள். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், அவசரகால மீட்புப் படையினர் குழந்தைகள் உட்பட காயமடைந்த பொதுமக்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாக, ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளது. மேலும், மின் சேவை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சூடான் ராணுவ மேஜர் ஜெனரல் பஹர் அகமது உள்பட 46 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்நட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சூடான் நாட்டில் கடந்த 2023 முதல் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.