ரஷ்ய அதிபர் புதின் கார் வெடித்து சிதறியதால் பரபரப்பு!

ரஷ்ய அதிபர் புதினுக்கு சொந்தமான கார் வெடித்த சம்பவம், அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் அதிகப்படியான பாதுகாப்பில் இருக்கும் தலைவர்களில் ஒருவரான ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் (72) உயிருக்கு பல அச்சுறுத்தல்கள் இருப்பதால், அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்காக ரஷ்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவர் ஏதேனும் ஓரிடத்துக்குச் செல்ல வேண்டுமென்றால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் சில வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு விடும் என்கின்றனர்.

இந்த நிலையில், புதின் பாதுகாப்பு கான்வாயில் இடம்பெற்றிருந்த கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. ரஷ்யாவைச் சேர்ந்த ஆரஸ் நிறுவனம் தயாரித்த ஆரஸ் லிமோசின் கார், மாஸ்கோ சாலையில் ரஷ்ய உளவுத்துறை தலைமையகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்தபோது, வெடித்துச் சிதறியது. இந்த விபத்தின்போது, காரில் அதிபர் புதின் பயணிக்கவில்லை என்பதால், நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினார். இருப்பினும், இந்த விபத்து குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கார் என்ஜினில் தீவிபத்து ஏற்பட்டு, பின்னர் உள்புறமும் பரவியதாகக் கூறுகின்றனர்.

அதிபர் புதினுக்கு மிகவும் பிடித்த காராக இருந்த லிமோசின் கார், சுமார் ரூ. 3 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் இந்த வகை கார்களைத்தான் புதின் பரிசாக அளித்தார்.

ரஷ்ய அதிபர் புதின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவொரு முயற்சியும், அணுசக்தி எதிர்வினையைத் தூண்டும் என்று ரஷ்ய அதிபர் மாளிகை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனிடையே, உடல்நலக் குறைவால் புதின் விரைவில் இறந்து விடுவார். அதன்பின்னர், அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும் என்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கூறியிருந்தார்.