நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு (திருத்தம்) மசோதாவை எதிர்த்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
சிஏஏ- 2019 மீது இந்திய தேசிய காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றதால் விசாரிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 மீது 2019 மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து வழக்கு, தேர்தல் நடத்தை விதிகள் (2024) திருத்தங்களின் செல்லுபடித்தன்மை குறித்து தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991 ஷரத்துக்கள் மற்றும் உணர்வுகளை பாதுகாக்க வேண்டிய காங்கிரஸின் தலையீடு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதேபோல், வக்பு (திருத்தம்) மசோதாவையும் எதிர்த்து விரைவில் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும். இந்திய அரசியலமைப்பு கொள்கைகள், நடைமுறைகள், மற்றும் செயல்பாடுகள் மீதான மோடி அரசின் அனைத்து தாக்குதல்களையும் நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
