ஏமனின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதலில் 74 பேர் பலி!

ஏமன் நாட்டின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 பேர் கொல்லப்பட்டனர்.

ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள ராஸ் இஸா எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 பேர் கொல்லப்பட்டதுடன், 170-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக இன்று (ஏப்.18) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச்.15 முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆட்சியில் நடத்தப்பட்ட மிகப் பயங்கரமானத் தாக்குதல் எனக் கூறப்படும் இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவம் தரப்பிலிருந்து எந்தவொரு விரிவானத் தகவலும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. ஆனால், ஏமன் மீதான அமெரிக்காவின் தாக்குதல் தற்போது தீவிரமடைந்துள்ளதையும், அதில் ஏராளமானோர் பலியானதையும் உறுதிப் படுத்தும் விதமாக ஹவுதிகள் வெளியிட்ட விடியோவில் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் பரவிக்கிடப்பது பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் ஆதரவுப் பெற்ற ஹவுதி கிளர்ச்சிப்படையின் எரிப்பொருள் மூலாதாரத்தை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் அந்நாட்டு மக்களை அச்சுறுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (ஏப்.18) இஸ்ரேலைத் தாக்கும் நோக்கில் ஹவுதி படைகள் செல்லுத்திய ஏவுகணைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஏமனின் கமரதான் தீவின் அருகிலுள்ள ராஸ் இஸா எண்ணெய்த் துறைமுகத்தின் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் அங்கு பணிப்புரிந்த தொழிலாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹவுதி கிளர்ச்சிப்படையின் செய்தித் தொலைக்காட்சியில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.