பகல்காம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை வீரர் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி ட்ரோல் செய்யப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் வினய் நர்வாலும் ஒருவர். திருமணமாகி ஒரு வாரமே ஆன நிலையில் அவர் தனது மனைவி ஹிமான்ஷி நர்வால் உடன் பஹல்காம் சென்றிருதபோது பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். வினய் நர்வால் உயிரிழப்பும், ஹிமான்ஷி கதறி அழுததும் நாடு முழுவதும் கவனம் பெற்றது.
அண்மையில் ஹிமான்ஷி, “வினய் எங்கிருந்தாலும், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக யாரும் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும். நிச்சயமாக, எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஹிமான்ஷி கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். தற்போது அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது தேசிய மகளிர் ஆணையம். ட்ரோலர்களைக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “வினய் நர்வாலின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி ஹிமான்ஷி நர்வால் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்படுவதைக் காண்கிறோம். அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஒரு பெண் அவரது சித்தாந்தங்களை வெளிப்படுத்தியதற்காக ட்ரோல் செய்யப்படுவது என்பது எவ்வகையிலும் ஏற்பதற்கில்லை. மேலும், ஒருவரின் கருத்தை ஏற்பதையோ, மறுதலிப்பதையோ நாகரிகமாக செய்ய வேண்டும். தேசிய மகளிர் ஆணையம் ஒவ்வொரு பெண்ணின் மாண்பையும், மரியாதையையும் பாதுகாக்க விழைகிறது.” என்று தெரிவித்துள்ளது.
மேலும், பகல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாக தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது. வினய் நர்வாலின் மதத்தைக் கேட்டு அவர் சுடப்பட்டதையும் தேசிய மகளிர் ஆணையம் சுட்டிக்காட்டி கவலையை வெளிப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த நாடும் இந்த பயங்கரவாத தாக்குதலால் காயம்பட்டதோடு, ஆத்திரமடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
