டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரான உடன், அரசின் செயல்திறன் துறை என்ற ஒன்றை உருவாக்கினார். டாஜ் எனப்படும் இந்த துறையின் தலைவராக டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க்கை டிரம்ப் நியமித்தார். அரசு செலவுகளை குறைக்கும் துறையின் தலைவரான எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஐநாவுக்கு அளித்து வந்த நிதியை ரத்து செய்தது, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம், அரசு நிறுவனங்கள் மூடல் என அவரது நடவடிக்கைகள் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தின.
இந்நிலையில் அரசின் செயல்திறன் துறை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் எலான் மஸ்க் அறிவித்தார். இது குறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில், ‘‘சிறப்பு அரசு ஊழியராக எனது திட்டமிடப்பட்ட நேரம் முடிவடைந்தது. வீணான செலவினங்களை குறைப்பதற்காக எனக்கு வாய்ப்பு அளித்த அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.