ஆஸ்திரியாவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி!

ஆஸ்திரியாவில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள், ஆசிரியர் உள்பட 11 பேர் உயிரிழந்ததாக காவல் துறை முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியாவில் க்ராஸ் நகரில் உள்ளதொரு பள்ளியில் இன்று(ஜூன் 10) காலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. இது குறித்து, காலை 10 மணியளவில் காவல்துறைக்கு தகவல் வந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் பள்ளியில் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ததுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பள்ளியில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன்பின் அவர், பள்ளி கழிப்பறைக்குச் சென்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது பலி 11-ஆக உயர்ந்துள்ளது. இந்த துயர சம்பவத்துக்கு பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.