இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. இஸ்ரேலும், ஈரானும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு மத்தியில் தான் ஈரான் மக்கள் அனைவரும் தங்களின் ‛வாட்ஸ்அப்’ செயலியை ‛டெலிட்’ செய்ய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான நீண்டகால மோதல் தற்போது உச்சமடைந்துள்ளது. இன்று 6வது நாளாக இஸ்ரேலும், ஈரானும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இஸ்ரேலியர்களுக்கு இனி கருணை காட்ட வேண்டாம். அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது. போர் தொடங்கிவிட்டது என்று ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இதனால் இஸ்ரேல் – ஈரான் இடையே புதிய போர் வெடித்துள்ளது. இதற்கிடையே தான் நேற்று இரவு இஸ்ரேல் மீது ஈரான் தனது பிரமாஸ்திர ஏவுகணையை பயன்படுத்தி உள்ளது. ஈரானில் இருந்து ஃபத்தா-1 (Fattah I) ஹைப்பர்சோனிக் ஏவுகணை இஸ்ரேல் மீது ஏவி கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஃபத்தா 1 ஏவுகணை என்பது இஸ்ரேலின் அயன்டோம் மற்றும் ஆரோ வான்வெளி பாதுகாப்பு மையத்தை தாண்டி தாக்கும் தன்மை கொண்டது என்று ஈரான் தெரிவித்துள்ளது. மணிக்கு 6,100 கிலோமீட்டர் வேகத்தில் (Mach 5) இந்த ஏவுகணை பயணிக்கும். 12 மீட்டர் நீளம் கொண்டது. மேலும், 1,400 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. 200 கிலோகிராம் வெடிபொருட்களை சுமந்து செல்ல முடியும். இந்த ஏவுகணையை இஸ்ரேலை தாக்குவதற்காகவே ஈரான் தயாரித்துள்ளது.
இதற்கிடையே தான் ஈரான் மக்கள் அனைவரும் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த வேண்டாம். உடனடியாக டெலிட் செய்ய வேண்டும் என்று ஈரான் தனது மக்களுக்கு வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஈரான் அரசின் செய்தி ஊடகமான, இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப் ஈரான் பிராட்காஸ்டிங் (IRIB) சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், வாட்ஸ்அப் பயன்டுத்தும் மக்களிடம் இருந்து முக்கிய தகவல்களை வாட்ஸ்அப் நிறுவனம் சேகரித்து அதனை இஸ்ரேல் உளவுத்துறைக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக மக்களின் இருப்பிடம், தகவல் பரிமாற்ற விவரங்கள் இஸ்ரேலுடன் பகிரப்படுகிறது. இதனால் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்துவது நாட்டுக்கு ஆபத்தானது. உடனடியாக டெலிட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுதொடர்பான எந்த ஆதாரத்தையும் ஈரான் செய்தி நிறுவனம் வழங்கவில்லை.
ஈரானின் இந்த குற்றச்சாட்டை வாட்ஸ்அப் நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம், ‛‛வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்களை பாதுகாக்க end-to-end encryption முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் செய்தி அனுப்பியவர் மற்றும் பெறுபவரை தவிர வேறு யாராலும் மெசேஜை படிக்க இயலாது. தவறான தகவல்களைப் பரப்பி ஈரானில் வாட்ஸ்அப் சேவையை முடக்க முயற்சி நடக்கிறது. இந்த நேரத்தில் மக்களுக்கு வாட்ஸ்அப் மிகவும் தேவை. நாங்கள் பயனர்களின் இருப்பிடத்தை கண்காணிப்பதில்லை. யார் யாருக்கு செய்தி அனுப்புகிறார்கள் என்பதையும் பதிவு செய்வதில்லை. தனிப்பட்ட செய்திகளையும் கண்காணிப்பது இல்லை. அதேபோல் எந்த அரசாங்கத்திற்கும் மொத்த தகவல்களையும் வழங்குவதில்லை” என்று கூறப்பட்டுள்ளது.