புதிய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு!

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்திய ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த முகுந்த் நரவனேவின் பதவிக் காலம், நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இன்று, இந்திய ராணுவத்தின் 29வது தலைமை தளபதியாக, மனோஜ் பாண்டே பொறுப்பேற்றுக் கொண்டார்.

ராணுவத்தின் துணை தளபதியாக பொறுப்பு வகித்து வந்த மனோஜ் பாண்டே, பொறியாளர்கள் பிரிவிலிருந்து ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்ட முதல் நபர். பிப்ரவரி 1 ஆம் தேதி, ராணுவத்தின் துணை தளபதியாக பொறுப்பேற்று கொள்வதற்கு முன்பு, சிக்கிமில் இந்திய, சீன ராணுவ எல்லை, அருணாச்சல பிரதேசம் பகுதிகள் அடங்கிய கிழக்கு ராணுவ பிரிவை மனோஜ் பாண்டே தலைமை தாங்கி நடத்தி வந்தார்.