இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை சுற்றி பார்த்தார். அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உடனிருந்தார்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி நூல் நூற்ற ராட்டையில் போரிஸ் ஜான்சன் நூல் நூற்றி சுற்றி மகிழ்ந்தார். தொடர்ந்து, மகாத்மா காந்தியின் சீடரான மேடலின் ஸ்லேட் அல்லது மிராபெனின் சுயசரிதையான ‘தி ஸ்பிரிட்ஸ் பில்கிரிமேஜ்’ என்ற புத்தகம் மற்றும் மகாத்மா காந்தி எழுதிய ‘கைட் டூ லண்டன்’ என்ற புத்தகத்தை போரிஸ் ஜான்சனுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இதையடுத்து, சபர்மதி ஆசிரமத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தி குறிப்பு ஒன்றை எழுதினார். அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:-

இந்த அசாதாரண மனிதரின் ஆசிரமத்திற்கு வருகை தந்தது, உலகை சிறப்பாக மாற்றுவதற்கு, உண்மை மற்றும் அகிம்சை போன்ற எளிய கொள்கைகளை அவர் எவ்வாறு அணி திரட்டினார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு மகத்தான பாக்கியமாக அமைந்தது. இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று காலை அலுவலகப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் அம்மாநில ஆளுநர் ஆச்சாசர்யா தேவ்ரத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இவர்களுடன் மாநில மூத்த அதிகாரிகளும், அமைச்சர்களும் உடனிருந்தனர்.

இங்கிலாந்து பிரதமருக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நகரத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் வரை 4 கி.மீ பாதையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலை எங்கிலும் பாரம்பரிய குஜராத்தி நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை குழுவினர் நடத்தினர். குஜராத்தில் ஒரு நாள் தங்கயிருக்கும் இங்கிலாந்து பிரதமர் அம்மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய வணிகத் தலைவர்களை சந்திக்கவுள்ளார். பிறகு, பஞ்மஹால் மாவட்டத்தில் உள்ள ஹலோலுக்கு அருகில் உள்ள பிரிட்டிஷ் கட்டுமான உபகரண நிறுவனமான ஜேசிபியின் உற்பத்தி நிலையத்திற்குச் செல்கிறார்.

தொடர்ந்து, குஜராத் பயோடெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் வளாகத்தை அவர் பார்வையிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இங்கிலாந்து பிரதமர் ஜான்சான் தனது குஜராத் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருவரும் இருநாட்டின் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.