6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி

6 முதல் 12 வயது வரை உள்ள சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் 2021 ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. அதன் தொடர்ச்சியாக, ஒமைக்ரான் பரவல் மூன்றாம் அலைக்கு வித்திட வாய்ப்புள்ளது என்பதால், சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தவும், பூஸ்டர் டோஸ் போடவும் அனுமதி அளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையேற்று, 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு 2022 ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வந்தன. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பணிகளும் ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்பிறகு, 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. கொரோனா பரவல் சில நாள்களாக லேசாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது 6 வயது முதல் 12 வயது வரை உள்ள சிறார்களுக்கும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிபுணர் குழு பரிந்துரையின் பேரில் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் நிபந்தனைகளுடன் அனுமதியளித்துள்ளது.