அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி நேரத்தில் வகுப்பு: பொன்முடி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு மட்டும் காலையில் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தமிழக சட்டசபையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 19 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் வரும் மே 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதாவது 22 நாட்களுக்கு நடைபெறுகிறது.

இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு மட்டும் காலையில் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்க மாணவிகளுக்கு காலையிலும், மாணவர்களுக்கு மாலையிலும் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.