பிரதமர் மோடி நாளை ஐரோப்பா நாடுகளுக்கு அரசு முறை பயணம்!

பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு இதுவரை 62 முறை பல்வேறு உலக நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். இறுதியாக 2021ஆம் ஆண்டில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை இத்தாலி, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், 63ஆவது வெளிநாட்டு பயணத்தை பிரதமர் மோடி நாளை மேற்கொள்ளவிருக்கிறார். இந்த முறை அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மே மாதம் 2ஆம் தேதி (நாளை) முதல் 4ம் தேதி வரை ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். உக்ரைன் மீதான ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். முதலில் ஜெர்மனி செல்லும் பிரதமர், பிறகு அங்கிருந்து டென்மார்க் செல்கிறார். டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு இறுதியாக அவர் பிரான்ஸ் செல்லவுள்ளார். மூன்று நாடுகளிலும் 65 மணி நேரம் செலவிடும் பிரதமர் மோடி, இந்த பயணத்தின்போது, 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். 7 நாடுகளை சேர்ந்த 8 உலகத் தலைவர்களை அவர் சந்திப்பதுடன் 50 சர்வதேச தொழிலதிபர்கள் உடன் கலந்துரையாட உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷால்ஸை சந்திக்கும் பிரதமர் மோடி இந்தியா-ஜெர்மனி இடையேயான இருதரப்பு பேச்சுவரத்தையில் பங்கேற்க உள்ளார். இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள், இந்திய-ஜெர்மனி உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. பின்னர், ஜெர்மனியில் உள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடுகிறார். கடந்த டிசம்பர் மாதம் ஜெர்மனியின் அதிபராக இருந்த ஏஞ்சலா மெர்கலின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, ஓலாஃப் ஷால்ஸ் புதிய அதிபராக பொறுப்பேற்றார். அவர் அதிபராக பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடி ஜெர்மனிக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

டென்மார்க் பிரதமர் மேட்டே பிரெடெரிக்சன் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும் 2ஆவது இந்தியா- நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதன் ஒருபகுதியாக, ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாட்டு பிரதமர்களுடன் கலந்துரையாடுகிறார். மேலும் டென்மார்க்கில் வசிக்கும் இந்தியர்களுடனும் உரையாடுகிறார்.

அதனைத்தொடர்ந்து பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிபர் இமானுவேல் மேக்ரோனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளார். இந்தியா-பிரான்ஸ் இடையேயான இருதரப்பு கலந்துரையாடலிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, ரஷ்யா-உக்ரைன் விவாகரம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.