காங்கிரஸ் கட்சியிடமிருந்து பணம் எதுவும் வாங்கவில்லை: பிரசாந்த் கிஷோர்

காங்கிரஸ் கட்சியிடமிருந்து பணம் எதுவும் வாங்கவில்லை என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

பிரபல தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பல கட்ட பேச்சுவார்த்தையில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டார். 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும் பல்வேறு யோசனைகளையும் பிரசாந்த் கிஷோர் முன்வைத்தார். கட்சியில் பிரசாந்த் கிஷோருக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியில் இணைய மறுத்துவிட்டதாக காங்கிரஸ் தரப்பிலும் பிரசாந்த் கிஷோர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸுக்கு வகுத்துக் கொடுத்த திட்டங்கள் என 80க்கும் மேற்பட்ட பக்கங்களில் ஆவணம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. கட்சியில் யாருக்கு என்ன பதவி வழங்க வேண்டும், யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும், எத்நெந்த இடங்களில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற விவரங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. சோனியா காந்தியுடனான பல்வேறு சந்திப்புகளிலும் பிரசாந்த் கிஷோர் பல்வேறு வியூகங்களை வழங்கியுள்ளார். ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சியிடமிருந்து பணம் எதுவும் பெறவில்லை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “காங்கிரஸ் தலைமையும், நானும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பல விஷயங்கள் பேசினோம். அதில் எங்களுக்குள் ஒத்தக் கருத்துக்கள் நிறைய இருந்தன. காங்கிரசில் நிறைய தலைவர்கள் இருப்பதால், தனித்தே தேர்தலில் நிற்க முடியும் என்று கூறினர். ஆனால், அதனை நான் மறுத்தேன். நான் கட்சியில் எந்தப் பதவியும் விரும்பவில்லை. காங்கிரசின் எதிர்கால திட்டங்கள் குறித்த வியூங்களைத்தான் தயாரித்துக் கொடுத்தேன். காங்கிரஸ் கட்சிக்கு அளிக்க விரும்பிய ஆலோசனைகளை மட்டுமே வழங்கினேன். கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தனது எதிர்காலம் குறித்து முதன்முறையாக தீவிரமாக விவாதித்தது. ஆனால் அதிகாரம் பெற்ற செயற்குழுவில் எனக்கு சில சந்தேகங்கள் இருந்தன. மேலும், அந்தக் குழுவின் ஒருபகுதியாக நான் இருக்க காங்கிரஸ் தலைமை விரும்பியது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக பிரியங்கா காந்தியை நியமிக்க வேண்டும் என்று நான் கூறியதாகவும், அதற்கு கட்சித் தலைமை ஏற்கவில்லை என்றும் செய்திகள் வருகின்றன. ஆனால், என்னால் என்ன முன்மொழியப்பட்டது என்பதை தற்போது சொல்ல முடியாது.

காங்கிரஸ் கட்சிக்கான தலைமைக் கொள்கையை வகுத்துக் கொடுத்த விபரத்தில், ராகுலின் பெயரோ அல்லது பிரியங்கா காந்தியின் பெயரோ இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். ராகுல்காந்தியின் நிலையை நான் எப்படி தீர்மானிக்க முடியும்? பாஜகவின் தொடர் விமர்சனத்தால் ராகுல் காந்தியின் பிம்பம் பாதிப்பு அடைந்திருந்தாலும் கூட, அவரால் அதில் இருந்து மீண்டும் எழுந்திருக்க முடியும் என்று என்னால் கூறமுடியும். கடந்த 2002ல் மோடியின் பிம்பம் மிகவும் குறைவு. ஆனால் இன்று நிலைமை வேறு; அதேபோல் ராகுல் காந்திக்கும் சாத்தியம். காங்கிரசின் எதிர்காலத் திட்டத்தைத் தயாரித்து வழங்கவும், ஆலோசனைகளை வழங்கவும் காங்கிரசிடம் இருந்து பணம் எதுவும் வாங்கவில்லை.

வருகிற 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் பிரதமர் மோடிக்கு சவாலாக யார் இருப்பார்கள் என்பது தெரியவில்லை. மாநிலத் தேர்தல்கள் மூலம் மக்களவைத் தேர்தலைக் கணிக்க முடியாது. காங்கிரஸ் கட்சி பழமையான கட்சி; நாட்டின் கடைசி கிராமம் வரை ஆழமாக பரவியுள்ளது. எனவே அவர்களுக்கு மக்கள் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.