ஸ்பெயினில் சுகாதார பணியாளருக்கு 20 நாட்களுக்குள் 2 முறை கொரோனா

ஸ்பெயினில் சுகாதார பணியாளராக வேலை செய்து வரும் பெண் ஒருவர் 20 நாட்களுக்குள் 2 முறை கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினில் சுகாதார பணியாளராக வேலை செய்து வருபவர் 31 வயது பெண். இவருக்கு 20 நாட்களுக்குள் அடுத்தடுத்து இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை அறியப்பட்ட குறைந்தபட்ச கால இடைவெளி இதுவே என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்த பெண்ணுக்கு கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் டெல்டா, ஜனவரியில் ஒமைக்ரான் ஆகிய வைரஸ்களின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த பெண்ணுக்கு முதல்முறையாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டபோது எவ்வித அறிகுறியும் தெரியவில்லை. ஆனால், சுமார் மூன்று வாரங்களுக்கு பிறகு அவருக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் அவர் வெவ்வேறுபட்ட உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

ஒருவருக்கு ஏற்கெனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் மீண்டும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.