எப்பப்பா செத்தாங்க.. எங்கம்மா ஜெ

எப்பப்பா செத்தாங்க.. எங்கம்மா “ஜெ”

முழுமையாக அம்பலப்படுத்தியதா ஆறுமுகசாமி ஆணையம்!

சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது குற்றச்சாட்டு!

18.10.2022 இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுப் பெற்ற நீதியரசர் ஆறுமுகம் ஆணையம், சமீபத்தில் தமிழ்நாடு அரசுக்கு அளித்த விசாரணை அறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

ஜெயலலிதா இறந்த நேரம் 05.12.2016 இரவு 11.30 மணி என்று மருத்துவமனை கூறும் நிலையில், அதற்கு முந்தைய நாளான 04.12.2016 அன்று மதியம் 3 மணியிலிருந்து 3:50 மணிக்குள் அவர் இறந்துவிட்டதாக சாட்சிகள் கூறுவதாக நீதிபதி ஆறுமுகசாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மயங்கி விழுந்த ஜெயலலிதா

ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நாளன்று அவர் முதல் மாடியில் உள்ள தனது அறையின் குளியலறையில் இருந்து திரும்பி படுக்கையை அடைந்தபோது மயங்கி விழுந்தார்.

அப்போது அங்கிருந்த சசிகலா உள்ளிட்டோர் அவரைத் தாங்கிப் பிடித்தனர்.

ஜெயலலிதா மயக்கமடைந்த நிலையிலேயே அவரது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவர் மயக்கமடைந்த பின்னர் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் சசிகலாவால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக மறைந்த முதல்வருக்கு மாஸ்க் மூலம் ஆக்சிஜன் வழங்கி முதலுதவி அளித்தனர்.

சிறிதும் தாமதிக்காமல், மயங்கி விழுந்த முதல்வரை உடனடியாக ஆம்புலன்சில் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்நோயாளியாக அனுமதித்தனர்.

முதல்கட்ட நோயறிதலுக்கு பின் அவர் ஐ.சி.யூ வுக்கு மாற்றப்பட்டபோது, ஸ்ட்ரெச்சரில் இருந்த அவருக்கு சுயநினைவு வந்தது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சசிகலாவின் உறவினர்களாலேயே அறைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன என்றும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்கு இடையிலான உறவு சுமூகமாக இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கடைசி மூச்சு வரை நடக்காத ஆஞ்சியோ அறுவை சிகிச்சை

ஜெயலலிதாவுக்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு, ஹைப்போ தைராடிசம், நாள்பட்ட வயிற்றுப்போக்குடன் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி இருந்ததாக சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் மூலம் அறியப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் இதயத்தில் வெஜிடேசன், பெர்ஃபொரேசன் மற்றும் டயஸ்டோலிக் டிஸ்பரேஷன் ஆகியவற்றுக்காக பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், மருத்துவர் சமின் ஷர்மா ஆகியோர் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர்.

ஆனால் அவரது கடைசி மூச்சு வரை ஏன் நடக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை கேள்வி எழுப்புகிறது.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, நால்வர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அப்போலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டியை விசாரிக்க வேண்டும் என்றும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவர் எந்த நேரத்திலும் டிஸ்சர்ஜ் செய்யப்படலாம் என வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாமல் இருக்க அப்போலோ மருத்துவர் தந்திரம் செய்தார் என்பன உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தபோது தனக்கு அளிக்கப்படவிருந்த சிகிச்சை தொடர்பாக ஒப்புக்கொண்டது என்ன, சசிகலா தவிர வேறு யார் மீதெல்லாம் விசாரணை செய்யப்பட வேண்டும் என வழங்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

சுயநினைவுடன் ஒப்புதல் அளித்த ஜெயலலிதா

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சமின் சர்மா, 25.11.2016 அன்று மருத்துவமனையில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தபோது அவருடன் விவாதித்து முன்மொழியப்பட்ட சிகிச்சைக்கு மறைந்த முதல்வர் ஒப்புதல் அளித்தார்.

மறைந்த முதல்வரின் இதயத்தில் வளர்ந்த வெஜிடேஷன் மற்றும் இதர உடல்நல கோளாறுகளை கருத்தில் கொண்டு உயிர்காக்கும் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்பது மேற்சொன்ன அமெரிக்க மருத்துவரின் கருத்தாக இருந்தது. (பக்கம் 551, 552 – 47.16 )

மேற்சொன்னவை 25.11. 2016 அன்று டாக்டர் பாபு ஆபிரகாமால் எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்டிருந்தது.

புத்திசாலி பெண்மணியான மறைந்த முதல்வர் அவருக்கு இதே அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்ட உடனேயே அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அவர் அதற்கு ஒப்புக்கொண்டிருப்பார்.

இரண்டு மாதங்களுக்கு பின்னர் இங்கிலாந்தில் இருந்து வந்த தீவிர சிகிச்சை மருத்துவரின் கருத்துப்படி இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு மாற்றப்பட்டது.

‘ஆனால் அன்று மருத்துவ ரீதியாக மறைந்த முதல்வரை பரிசோதிக்காத இங்கிலாந்து மருத்துவர் எழுத்துப் பூர்வமாக அல்லாமல் நேரடியாக வாய்மொழியாக கருத்து தெரிவித்தார் என்று கூறப்படுகிறது’ என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பாபு ஆபிரகாம் அறுவை சிகிச்சை தேவையில்லை என்ற இங்கிலாந்து மருத்துவரின் வாய்வழி கருத்தை மட்டுமே மேற்கோள் காட்டியுள்ளார்.

இம்முடிவை மாற்றுவதற்கான உரிமை அமெரிக்க மருத்துவர் தவிர சசிகலாவுக்கும் இருந்தது.

நெருக்கடியின் போது முடிவெடுக்கும் திறன் பெற்றவர்கள், கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சையை தொடராமல் தவறிழைத்திருக்கலாம்.

இது (கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை) அமெரிக்க மருத்துவரின் கருத்துப்படி மறைந்த முதல்வரின் உயிரை காப்பாற்றும் விளைவை ஏற்படுத்தி இருக்கலாம். (பக்கம் 552, 553 – 47.17 )

*’தந்திரம் செய்த டாக்டர் பாபு ஆபிரகாம்’*

அன்றே நடைமுறையை செய்ய ஒப்புக்கொண்ட டாக்டர் சமின் சர்மாவின் கருத்தை முதல்வர் ஏற்றுக்கொண்ட பின்னர் இம்மாற்றம் பின்னிட்டு யோசனையாக வந்துள்ளது.

டாக்டர் சமின் ஷர்மா ஆஞ்சியோ செய்யத் தயாராக இருந்து மறைந்த முதல்வரும் அதை ஏற்றுக் கொண்ட பிறகு நுரையீரல் நிபுணரான டாக்டர் பாபு ஆபிரகாம் ஏன் டாக்டர் ரிச்சர்டு பீலேவை அழைக்க வேண்டும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது அப்போலோ மருத்துவமனை ஆவணங்களில் பதிவுகளில் இருந்து தெளிவாகிறது.

எனவே, ஆஞ்சியோவை தவிர்ப்பதற்காக சில அதிகாரம் பெற்றவருக்கு உதவ டாக்டர் பாபு ஆபிரகாம் தீவிர மருத்துவரான டாக்டர் ரிச்சர்ட் பீலே அறுவை சிகிச்சை தள்ளிப் போடலாம் என்று கருத்து தெரிவித்ததாக ஒரு தந்திரம் செய்து அமெரிக்க மருத்துவர் அறுவை சிகிச்சை நிபுணருக்கு ஆலோசனை வழங்கினார் என்று ஆணையம் முடிவு செய்கிறது. (பக்கம் 553 – 47.18)

ஜெயலலிதா இதய செயலிழப்பு ஏற்பட்டது எப்போது?

மறைந்த முதல்வரின் இறந்த நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துவதுமாகும்.

இறப்பு நேரம் அதிகாரப்பூர்வமாக 05.12.16, அன்று இரவு 11:30 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் மறைந்த முதல்வரின் இறுதி நேரத்தில் அவரைக் கவனித்துக் கொண்ட பாராமெடிக்கல் பணியாளர்களின் சாட்சியங்களுக்கும் இதற்கும் பெருமளவில் வேறுபாடுள்ளது.

04.12.16 அன்று பிற்பகல் 3:50 மணிக்கு முன்பே மறைந்த முதலமைச்சருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்றும், இதயத்தில் மின்சார செயல்பாடு இல்லை மற்றும் ரத்த ஓட்டம் இல்னல என்பதை அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்த செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணி மருத்துவர்களின் தெளிவான சாட்சியங்களாகும். (பக்கம் 537 – 46.71)

வேறு தேதியில் முதலாம் ஆண்டு நினைவு அனுசரிப்பு
மறைந்த முதல்வரின் மருமகன், தீபக்கின் சாட்சியத்தின்படி, மனறந்த முதல்வரின் மரண நேரத்தை மிகவும் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்.

நோயுற்ற மறைந்த முதல்வரை அருகிலிருந்து கவனித்துக்கொண்ட மற்றும் அவர் மருத்துவமனனயில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நடந்த நிகழ்வுகளையும் முன்னேற்றங்களையும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையையும் அவ்வப்போது முழுமையாகத் தெரிந்த அவரின் ஓட்டுநர் மற்றும் பூங்குன்றன் ஆகிய இருவரின் தகவலின் அடிப்படையில், 04.12.2016 அன்று மதியம் 3:00 முதல் 3:30 மணி வரை என மறைந்த முதல்வரின் இறந்த நேரத்தைக் கருத்தில் கொண்டு, அவர் இறந்த முதலாம் ஆண்டு நினைவை தீபக் அனுசரித்தார் என்பது அவரது சாட்சியமாகும். (பக்கம் 538 – 46.73)

ஜெயலலிதா ஏன் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை!

ஜெயலலிதாவின் இதயத்தில் வெஜிடேசன், பெர்ஃபொரேசன் மற்றும் டயஸ்டோலிக் டிஸ்பரேஷன் ஆகியவற்றுக்காக பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், மருத்துவர் சமின் ஷர்மா ஆகியோர் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர்.

ஆனால் அவரது கடைசி மூச்சு வரை ஏன் நடக்கவில்லை (பக்கம் 557 – 47.27. ஒ)

இரண்டு நுரையீரல்களிலிருந்தும் (ஒரு நாளைக்கு சுமார் 1000 மிலி) பெருமளவிலான திரவம் வெளியேற்றப்படுவதைக் கருத்தில் கொண்டாவது, மருத்துவமனையில் ஆதரவாக நெருங்கிய உறவினர் இல்லாத மனறந்த முதல்வர் மீது சில அனுதாபங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். (பக்கம் 558 – 47.27.ஓ)

டாக்டர் ரிச்சர்ட் பீலே மறைந்த முதல்வரை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லத் தயாரென்று கூறியிருந்தும், அது ஏன் நடக்கவில்லை? (பக்கம் 558 – 47.27)

டாக்டர் சமின் ஷர்மா ஆஞ்சியோ செய்வதைப் பற்றி விளக்கியபின், அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், அது ஏன் நடக்கவில்லை? (பக்கம் 558 – 47.27. அ.அ)

சசிகலா தவிர யார் மீது விசாரணைக்கு பரிந்துரை?

இந்த அனைத்து கருத்துகளில் இருந்தும், வி.கே.சசிகலா, மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர். ஜெ.ராதா கிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதார அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து, விசாரணைக்கு பரிந்துரைக்கிறது.
47.29.

டாக்டர் ஒய்.வி.சி.ரெட்டி மற்றும் டாக்டர்.பாபு ஆபிரகாம் மறைந்த முதல்வருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

அவர்கள் பம்பாய், பிரிட்டன் மற்றும் அமெரிக்க மருத்துவர்களை அழைத்து, ஆஞ்சியோ / அறுவை சிகிச்சை செய்வதற்கான கருத்தைப் பெற்றாலும், ஒரு தனிப்பட்ட நபரின் கட்டாயத்தினால் சட்ட விரோதமாக இலக்கை அடைவதற்காக அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தினர்.

எனவே, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் ராமோகன் ராவை பொறுத்தவரை செயல்முறைகளுக்காக பல்வேறு நாட்களில் 21 படிவங்களில் கையொப்பமிடுவது குறித்து அவர் அரசுக்கு கடிதம் வாயிலாகத் தெரிவிக்கவில்லை என்பதைத் தவிர ஆணையம் அவருக்கு எதிராக குறைகள் எதையும் காணவில்லை.

நிச்சயமாக இது ஒரு நபரால் செய்யப்பட்ட மாபெரும் குற்றமாகும்.

குறிப்பாக இது முதல்வரது உயிர் தொடர்பானது என்பதால் அதற்கான விளைவுகளை நிச்சயம் பெறுவார் எனவே விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. (பக்கம் 559 – 47.30)

அப்போலோ பிரதாப் ரெட்டி வெளியிட்ட பொய்யான அறிக்கை

அதே போல அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி உண்மைகளைத் தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்ற நபராக இருந்தும் செய்தியாளர் சந்திப்பில் மறைந்த முதல்வர் எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டார்.

இரண்டாவதாக அவர் தனது அறையில் அடிக்கடி விளக்க கூட்டத்தை நடத்திய போதிலும் மறைந்த முதல்வரின் உடல்நலக் குறைவு மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து உண்மை நிலையை வெளிப்படுத்தத் தவறியதால் இது விசாரிக்கப்பட வேண்டியதாக ஆணையம் கருதுகிறது என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா மருத்துவசிகிச்சை தர்மத்தை மீறிய தமிழகம் முழுவதும் உள்ள “அப்பல்லோ” மருத்துவமனைகளை மூட மருத்துவ கவுன்சில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று,
சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று புகழப்பட்ட மறைந்த முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பல்வேறு முரணான அறிக்கைகளை வெளியிட்ட அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், சாதாரண பொது மக்களுக்கு அளிக்கும் சிகிச்சை முறையில் செய்யப்படும் குளறுபடிகள் எவ்வளவு நடந்திருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் அங்காலாய்க்கின்றனர்.

மொத்தத்தில் எப்பப்பா செத்தாங்கா? எப்படி செத்தாங்க? எங்கம்மா என்று ஏங்கிய அ.தி.மு.க வின் தொண்டர்களுக்கு, ஆறுமுகசாமி அம்பலப்படுத்திய விவரங்கள் பெரும் அதிர்ச்சியையும், கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது என்றால் அது மிகையல்ல.

*கூடல்.காம்*
18.10.2022