சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத அண்ணாமலை: சந்திரசேகர ராவ்

சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத அண்ணாமலை தமிழகத்தில் ஆட்சியை கவிழ்ப்பாரா என தெலுங்கானா சட்டமன்றத்தில் சந்திர சேகர ராவ் அண்ணாமலையை கலாய்த்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக பேசிய அண்ணாமலை “ மகாராஷ்ட்ராவில் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆட்சியை கலைத்ததைப் போல தமிழகத்திலும் திமுக ஆட்சியை ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்பட்டு வந்து கலைப்பார்” என அண்ணாமலை பேசியது சர்ச்சையானது.

இதனிடையில் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவருமான சந்திர சேகர ராவ், பாஜகவை தேசிய அளவில் கடுமையாக எதிர்த்து வருகிறார். பாஜகவிற்கு எதிராக மாநில கட்சிகளை ஒன்று திரட்டும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேசிய கட்சியை விரைவில் தொடங்க போவதாகவும் சந்திரசேகர் ராவ் குறிப்பிட்டு இருந்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க சந்திர சேகர ராவ் முயற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில் அண்ணாமலையை குறிப்பிட்டு பேசிய சந்திர சேகர ராவ் , தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கவிழ்க்க போவதாக அண்ணாமலை கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்தும் ஏக்நாத் ஷிண்டே வர போவதாக அண்ணாமலை சொல்லி வருகிறார். அண்ணாமலையால் அவரின் சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. சொந்த தொகுதியில் வெற்றியை பெற முடியாத அண்ணாமலை தான் தமிழ்நாட்டில் ஆட்சியை கவிழ்க்க போவதாக கூறுகிறார். பாஜக விற்கு தெரிந்தது எல்லாம் ஏக்நாத் ஷிண்டே வகை தந்திரம் தான். அவர்களால் ஒரு போதும் நேர்மையாக வெற்றி பெற முடியாது” என்று பேசியுள்ளார்.

இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

தெலுங்கானாவில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கேசிஆரின் குடும்ப ஆட்சியே காரணம். இந்த நிலையில் தெலுங்கானா சட்டசபையில் என்னை பற்றி பேசி கேசிஆர் நேரத்தை செலவிட்டுள்ளார். நீங்களோ (கேசிஆர்) தமிழக முதல்வர் ஸ்டாலினோ முதல் தேர்தலிலேயே வெற்றி பெறவில்லை என்பதை கேசிஆருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். நமது பணிகள் மூலம் மக்களின் நம்பிக்கையை பெறுவதை இலக்காக கொண்டிருந்தால் தேர்தலில்களில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் ஒரு விஷயமாகவே இருக்காது. தெலுங்கானா மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக நீங்கள் (கேசிஆர்) இழந்துவிட்டீர்கள் என நான் நினைக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை விமர்சித்துள்ளார்.