மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: வானதி சீனிவாசன்

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவிடம், ராகுல் என்ன பேசினார் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இதற்கு, நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, ஏசு கடவுளா? இல்லை கடவுளின் மகனா? என்பது குறித்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் நடத்திய உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

தனது நடை பயணத்தின் ஒரு பகுதியாக கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உள்ளிட்டோருடன் பேசினார். அப்போது இயேசு கடவுளா என கேட்டார்! அதற்கு சார்ஜ் பொன்னையா இயேசு கடவுள்தான் என கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில் பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. காரணம் கன்னியாகுமரியைச் சேர்ந்த பாதிரியரான ஜார்ஜ் பொன்னையா கடந்த சில மாதங்களுக்கு முன் இந்துக்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியதுதான். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாதிரியார் ஸ்டோன்ஸ் சுவாமி நினைவஞ்சலி கூட்டத்தில் பேசிய இவரை அருமனை போலீசார் கைது செய்தனர். இந்து மத உணர்வுகளை புண்படுத்தி பேசியதாக ஜார்ஜ் பொன்னையா தேடப்பட்டு வந்த நிலையில் மதுரை கருப்பாயூரணி பகுதியில் கைது செய்யப்பட்டார். அதாவது அந்த கூட்டத்தில் பேசியிருந்த சார்ஜ் பொன்னையா தமிழகத்தில் திமுக ஆட்சி மலர கிறிஸ்தவர்களே காரணம் எனவும் திமுக ஆட்சி நாங்கள் போட்ட பிச்சை எனக் கூறியிருந்தார். மேலும் அமைச்சர்கள் இந்து ஆலயங்களுக்கு செல்வது ஆகியவற்றையும் விமர்சித்து பேசியது சர்ச்சையானது.

கன்னியாகுமரியில் பாத யாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்துக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என கோவை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் பாஜக தலைவருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ராகுல் காந்தி எப்போதும், பாரதிய சிந்தனைக்கு எதிரானவர் என்பது பலமுறை நிரூபணமாகியுள்ள ஒன்று. நாடாளுமன்ற மக்களவையில், இந்தியா என்பது நாடல்ல, மாநிலங்களின் ஒன்றியம் என, திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை முழங்கியவர். நாட்டின் எந்த பகுதிக்குச் சென்றாலும் பிரிவினைவாதம் பேசுபவர்களுடந்தான் அவர் கலந்துரையாடுவார். அவர்கள்தான் ராகுலின் நண்பர்கள். 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தோல்வி என்றதும் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார். தலைவர் என்ற பொறுப்பை ஏற்காமல், கட்சிக்குள் அதிகாரத்தை செலுத்தி வருபவர் ராகுல். அதனால் காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்களே காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில்தான், 60-க்கும் அதிகமான சொகுசு வசதிகள் கொண்ட கேரவன்களுடன், யாத்திரை தொடங்கியிருக்கிறார் ராகுல். இந்து மத நம்பிக்கைகள், சடங்குகள் மீது நம்பிக்கையில்லாதவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வந்த ராகுல், தேர்தலில் தொடர் தோல்வி என்றதும், இந்துவாக நடிக்கத் தொடங்கினார். தமிழகத்திற்கு வந்தால் மட்டும் இந்து கோயில்களுக்கு செல்ல மாட்டார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது, மற்ற மத வழிபாட்டு தலங்களுக்கு மட்டும் சென்றது சர்ச்சையானது. அதனால் வேறு வழியின்றி திருநெல்வேலியில் கோயிலுக்கு சென்றார். இப்போது பாத யாத்திரை என்ற பெயரில் சொகுசு கேரவன் யாத்திரை தொடங்கியுள்ள ராகுல், கன்னியாகுமரியில் கிறிஸ்தவ பாதிரியார்களுடன், உரையாடல் நடத்தியுள்ளார். ஆனால், யாத்திரை தொடங்கிய இடத்தில் உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லவில்லை.

சுசீந்திரம் வந்த அவர், தாணுமாலையன் கோயில், நாகர்கோயில் நாகராஜா கோயிலுக்கும் செல்லவில்லை. இதற்கெல்லாம் நேரமில்லாத, மனமில்லாத ராகுல், இந்திய திருநாட்டையும், பாரத மாதாவையும் கொச்சைப்படுத்திய, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்து பேச நேரம் இருந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடந்த கூட்டத்தில், மண்டைக்காடு பகவதி அம்மனை இழிவுபடுத்தி பேசியவர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா. ‘பாரத மாதாவிடம் உள்ள அசிங்கம் நம்மிடம் வந்து விடக்கூடாது என்பதற்காக ‘ஷூ’ போட்டுக் கொள்கிறோம்’ என்று பேசியவர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா. நாடார் சமுதாயத்தின் பெயரைச் சொல்லி, எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. அவர்களை தரக்குறைவாக பேசியவர். மேலும் கிறிஸ்தவர்கள் வளர்ந்து வருவதாக இந்து சகோதரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தவர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா. இப்படி பட்ட ஜார்ஜ் பொன்னையாவின் இந்து மத வெறுப்பு பேச்சை, தேசவிரோத பேச்சை, ராகுல் காந்தி ஏற்கிறாரா என்பதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும். இப்போது ஜார்ஜ் பொன்னையாவிடம் என்ன பேசினார் என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இதற்காக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.