மலேசியாவின் பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்பு!

மலேசியாவின் பிரதமராக மக்கள் நீதி கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிம் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

மலேசியா நாடாளுமன்றத்திற்கு கடந்த 19 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 222 இடங்களில் ஆட்சி அமைக்க 112 இடங்களைப் பெற வேண்டும் என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது. மக்கள் நீதி கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான பகதான் ஹரப்பான் கூட்டணி 82 இடங்களை வென்றது. முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான பெரிகதான் நேஷனல் கூட்டணி 72 இடங்களை வென்றது. இதனால் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் மலேசிய அரசியலில் கடந்த 5 நாட்களாக குழப்பம் நிலவியது.

இந்நிலையில் இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அன்வர் இப்ராஹிமிற்கு உள்ளதாக கருதிய மன்னர் சுல்தான் அப்துல்லா, அவரை மலேசியாவின் பிரதமராக நியமித்தார்.

இந்நிலையில் இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மலேசியாவின் 10வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.