கட்சி பெயர் தெரியாத காலத்தில் இருந்தே இருக்கிறோம்: வானதி சீனிவாசன்

பாஜகவில் இருந்து விலகி வானதி சீனிவாசன் திமுகவில் இணையவுள்ளதாக பரவிய தகவலுக்கு வானதி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் கடுமையான மும்முனை போட்டிக்கு மத்தியில் உலக நாயகன் கமல்ஹாசனை 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்று கோவையின் முதல் பாஜக வேட்பாளர் என்ற சிறப்பை அவர் கட்சிக்கு பெற்று தந்துள்ளார். தற்போது பாஜக சட்டமன்ற உறுப்பினராகவும், பாஜக மகளிரணியின் தேசிய தலைவராகவும் பொறுப்பு வகித்து வரும் வானதி சீனிவாசனை குறித்து அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பதிவிட்ட ட்வீட் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் ஏறக்குறைய இதுவரை வெளியிட்ட தகவல்கள் அப்படியே நடந்திருந்தாலும் தற்போதைய தகவல் சாத்தியம்தானா என்ற கேள்வி எழுகிறது. எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூடுதலாக தேசிய மகளிர் அணி தலைவர் உள்ளிட்ட பெரும் பதவிகளை வகித்து வருகிறார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் தனது டுவிட்டர் பதிவில், பாஜக எம்எல்ஏவான வானதி சீனிவாசன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைய உள்ளார். பாஜகவால் தொடர்ந்து அவர் ஓரங்கட்டப்பட்டு வருவதாக உணர்கிறார். வட தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் பொறுப்பில் இருந்து வானதியின் கணவர் சீனிவாசன் நீக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் வானதிக்கு கசப்பு ஏற்பட்டுள்ளது. சீனிவாசன் கடந்த 15 ஆண்டுகளாக இந்த பொறுப்பில் இருந்து வந்தவர். தற்போது, திமுகவில் இணைவதை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்டாலினின் அமைச்சரவையில் வானதிக்கு ஒரு இடம் கொடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்வீட் விவாதப்பொருளாகவும் மாறியது.

இந்நிலையில், சவுக்கு சங்கரின் தகவலுக்கு பதில் அளித்துள்ள வானதி சீனிவாசன், “எனக்கு கட்சி தலைமை தேசிய பொறுப்புகளை வழங்கி கவரவித்துள்ளது. எனது கணவரை வி.எச்.பி.யில் தேசிய இணை பொறுப்பாளராக பதவி உயர்வு அளித்துள்ளது, அதனால் தான் மாநில பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். தமிழ்நாட்டில் கட்சியின் பெயர் தெரியாத காலத்தில் இருந்து கட்சியில் உள்ளோம். இதுபோன்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ள வானதி நாங்கள் என்றும் பாஜகதான்’’ என கூறினார்.