அதிமுக இல்லை என்றால் பாமக என்ற கட்சியே வெளியே தெரிந்திருக்காது: ஜெயக்குமார்

அதிமுக நான்காக உடைந்து இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து இருந்த நிலையில், அதிமுக இல்லை என்றால் பாமக என்ற கட்சியே வெளியே தெரிந்திருக்காது என்றும், அதிமுகவை வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

புதுச்சேரி அருகே நேற்று பாமக சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். “சில கட்சிகள் தமிழ்நாட்டில் விளம்பர அரசியலையே செய்து வருகின்றனர். செய்தியை பார்த்தே ஒரு கட்சி என்ன செய்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. ஒருவர் வாட்சை காட்டுகிறார். மற்றொருவர் அடுக்குமொழியில் பேசுகிறார். வளர்ச்சி அரசியல் மட்டுமே நமக்கு செய்யத் தெரியும். நமக்கான அங்கீகாரம் என்பது கிடைக்கும். நம்மை விட்டால் தமிழ்நாடு மக்களுக்கு வேறு வழி கிடையாது. நமக்கான களம் நன்றாக இருக்கிறது. அதிமுக நான்காக உடைந்து இருக்கிறது. திமுக மீது விமர்சனம் பலமாக இருக்கிறது. மற்ற கட்சியை எடுத்துக்கொண்டால் சத்தம் மட்டுமே அதிகம் கேட்கிறது” என்று பேசினார்.

இந்த நிலையில் இன்று சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

பாமக ஏறி வந்த ஏணி அதிமுக. பாமகவை ஏற்றி விட்டது ஜெயலலிதா. அதிமுக இல்லை என்றால் பாமக என்ற கட்சியே வெளியே தெரிந்திருக்காது. ஜெயலலிதா கூட்டணி வைத்த உடன்தான் பாமகவிற்கு அங்கீகாரம் கிடைக்கிறது. அதற்கு முன்பு பாமகவிற்கு அங்கீகாரமே கிடையாது. 1991 ஆம் ஆண்டு பாமக சட்டமன்றத்தில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பதை அன்புமணி ராமதாஸ் நினைத்துப் பார்க்க வேண்டும்.

1998 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து 5 சீட்டு கொடுத்த பிறகுதான் நான்கு இடத்தில் வருகிறார்கள். நான்கு இடத்தில் ஜெயித்ததால் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி மறந்து அன்புமணி ராமதாஸ் இப்படி பேசினால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, உங்கள் பக்கம் உள்ள தொண்டர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள்.

2001 ஆம் ஆண்டு 27 இடங்களில் அதிமுக சார்பில் பாமகவிற்கு சீட்டு கொடுக்கப்பட்டது. அதில் 20 இடங்களில் பாமக வெற்றி பெற்றது. அதிமுக தயவால் மட்டுமே நீங்கள் வெற்றி பெற்றீர்கள். அதிமுகவால் மட்டுமே சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உள்ளே சென்றீர்கள். எம்பி ஆனீர்கள். பலம் வாய்ந்த அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும் என்று நினைத்து பேசினால் அதிமுக சிறுமை ஆகி விடுமா?

அதிமுக தான் அன்புமணி ராமதாஸுக்கு எம்பி என்ற பதவியை அடையாளம் காட்டியது. அன்புமணி ராமதாஸின் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அன்புமணி ராமதாஸின் கருத்து மற்றவர்கள் எள்ளி நகையாடும் அளவிற்கு தான் உள்ளது. இது போன்ற கருத்துக்களை சொல்லி சிறுமைப்படுத்துகின்ற வேலையை எதிர்காலத்தில் அவர் செய்ய வேண்டாம். அதிமுகவை வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். அவர் ஒன்றை சொன்னால் அதிமுக சார்பில் 100-ஐ சொல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.