மதுரை ஆவின் பணியாளர்கள் 47 பேரையும் நீக்கி ஆணையர் உத்தரவு!

மதுரை ஆவினில் 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் மேலாளர் உட்பட நேரடியாக நியமனம் செய்யப்பட்ட 47 பேரின் நியமனங்களில் முறைகேடு நடந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரையும், அப்பணியில் இருந்து நீக்க ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக ஆட்சியின் போது 2019 மற்றும் 20220 ஆகிய ஆண்டுகளில் மதுரை ஆவினில் மேலாளர், உதவி பொது மேலாளர் உட்பட 61 பணியிடங்கள் நேரடியாக நியமிக்கப்பட்டன. இந்த நியமனங்களை பொது மேலாளர் ஜனனி சவுந்தர்யா தலைமையிலான தேர்வுக் குழு எழுத்து தேர்வு, நேர்காணல் நடத்தி நியமனம் செய்தது. இந்த நியமனங்களில் போது, விண்ணப்பிக்காமல் நேரடி தேர்வு, அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 17 பேர் தேர்வானது, வங்கி டிடி, மாற்றி விண்ணப்பித்தது, தகுதியுள்ளவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது உள்ளிட்ட முறைகேடுகள் அடுத்தடுத்து வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு மற்றும் பால்வளம் துணைப் பதிவாளர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் மதுரை ஆவின் நியமனத்தில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டன.

இதுதொடர்பான அறிக்கை ஆணையர் சுப்பையனுக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து முறைகேடாக நியமிக்கப்பட்ட மேலாளர் , முதுநிலை பணியாளர்கள், ஜூனியர் அசிஸ்டென்ட், துணை மேலாளர்கள் என 47 பேரின் நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டார். அதேபோல் அப்போதைய ஆவின் மேலாளர் காயத்ரி மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்ய காரணமாக இருந்த தேர்வுக் குழு மீதும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.