அமெரிக்க அதிபர் பைடனை 13 ஆம் தேதி சந்திக்கிறார் ஜப்பான் பிரதமர்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் சந்திப்பு வரும் 13 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கிழக்கு ஆசிய நாடான ஜப்பான், தென் கொரியா, அமெரிக்காவுடன் நட்பு ரீதியிலான தொடர்பு கொண்டுள்ளது. எனினும், மறுபுறம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் வட கொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த 1 ஆம் தேதி ஜப்பானை நோக்கி குறுகிய தூர பாலிஸ்டிக் ரக ஏவுகணையை வட கொரியா ஏவி சோதித்தது. இதனை தொடர்ந்து நடந்த ஆளும் தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் பேசிய வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன், நாட்டின் அணு ஆயுத உற்பத்தியை அதிவேகத்தில் அதிகரிக்க உத்தரவிட்டார். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது.

இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் வைத்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வரும் 13 ஆம் தேதி நேரில் சந்தித்து பேச உள்ளார். இதனையொட்டி, வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் வருகையை அதிபர் ஜோ பைடன் எதிர்நோக்கி காத்து இருக்கிறார். இந்த சந்திப்பில் எங்களுடைய இரு அரசாங்கங்கள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் நாட்டு மக்களின் உறவுகளை ஆழப்படுத்துவதற்கான ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பில் இரு தலைவர்களும், சர்வதேச அளவில் நிலவி வரும் பருவநிலை மாற்றம், வட கொரியா, சீனாவை சுற்றி நிலவும் பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்கள், உக்ரைன் மீது படையெடுத்து உள்ள ரஷ்யா உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்த உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.