ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்: கி.வீரமணி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக ஆளுநர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அரசியல் அமைப்பு சட்டத்தில் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. சட்டமன்றத்தில் அவர் தனித்து உரையாற்றியிருப்பது மற்றும் பாதியிலேயே வெளியேறியது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். தமிழக அரசியலில் ஆளுநர் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டது இதுவே முதல்முறை. ஆளுநர் உரை என்பது ஆளுநர் தயாரிப்பது அல்ல. அரசு மற்றும் அரசின் அமைச்சர்கள் மூலமாக அரசு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதை வாசிக்கும் உரிமை மட்டுமே உள்ளது. மத்திய அரசிலும் பிரதமர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு முன்பு அரசின் திட்டங்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் உள்ளது. அதை குடியரசுத் தலைவர் வாசிப்பாரே தவிர குறுக்கீடு செய்ய முடியாது.

அதே போல் தான் மாநில அரசுகளிலும் ஆளுநருக்கு வாசிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. அதை இவர் கொச்சைப்படுத்தி உள்ளார். திராவிட மாடல் அரசு, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட பெயர்களை அவர் புறம்தள்ளி பேசுவது நாகரிகமானது அல்ல. மாற்றுக் கருத்து இருந்தால் தனிப்பட்ட முறையில் அரசிடம் தெரிவிக்கலாம். இப்படி பேரவையை விட்டு வெளியேறுவது சரியல்ல. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் தமிழக ஆளுநரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக ஆளுநர் ஆளுநராக நடப்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்.காரராக நடந்து கொள்கிறார். தமிழகத்தில் நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனை சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசின் தூதுவராக ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை வைத்து தமிழகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை செய்து வருகிறார்.

அவர் ஒரு அரசு ஊழியர். ஆனால் அரசுக்கு எதிராகவும் மக்களுக்கு எதிராகவும் பேசி வருவது கண்டனத்திற்கு உரியது. மத்திய அரசு உடனடியாக அவரை திரும்ப பெற வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் ஆளுநரின் செயல்பாடு குறித்து முதலமைச்சர் உடனடியாக தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அதை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக அவரை திரும்ப பெற வேண்டும். குறிப்பாக பேரறிவாளன் விடுதலை உள்ளிட்ட பல கோப்புகளை ஆளுநர் பரிசீலிக்கவும் இல்லை. திருப்பி அனுப்பவும் இல்லை. இதிலிருந்து மக்களின் நல்ல திட்டத்திற்கும், அரசின் கொள்கைக்கும் எதிராகவே செயல்படுபவர் ஆளுநர் என்.ஆர். ரவி என்று தெரிய வருகிறது. அவர் ஆளுநராக இருக்க ஒரு நொடி கூட தகுதி இல்லாதவர்.

மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் இல்லாத மாநில அரசுகளை ஆளுநர்களை கொண்டு அடக்க நினைக்கிறது. அதன் ஒரு பகுதியாக கேரளம், தமிழகம், தெலுங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் நெருக்கடி கொடுத்து பிளவுபடுத்தும் வேலையை செய்து வருகிறது. உடனடியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கி.வீரமணி கூறினார்.