வேங்கைவயல் சம்பவத்திற்கு எதிராக அணி திரள இருக்கிறோம்: திருமாவளவன்!

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக திருமாவளவன் முக்கியத் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தலித்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. குடிநீரில் மனித மலத்தை கலந்து மிகக் கொடூரமான ஒரு விஷயத்தை செய்துள்ளனர். நல்ல வேளையாக பொதுமக்கள் பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி தப்பித்துக் கொண்டனர். இனியும் அந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்த முடியுமா? எத்தனை முறை சுத்தம் செய்தாலும் அந்த எண்ண ஓட்டத்தை நம் மனதில் இருந்து அகற்ற முடியாது என பல்வேறு தரப்பினரும் கூறினர். எனவே தான் சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு புதிதாக கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் நல்ல குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக யாருமே கைது செய்யப்படவில்லை என்பது தான் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. வேங்கைவயல் கிராமத்தில் சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த மோசமான செயலை செய்த ஆதிக்க சாதி மனப்பான்மை கொண்ட நபர்கள் யார்? என்பது தான் பல்வேறு தரப்பினரின் கேள்வியாக இருக்கிறது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க கமிட்டி ஒன்று போடப்பட்டுள்ளது. அதன் அறிக்கை விரைவில் வெளியாகும். சட்டப்பேரவையில் இதுகுறித்து உரிய விளக்கம் தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதை சுட்டிக் காட்டினார்.

இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படாதது பற்றி கேள்வி எழுப்புகையில், இந்த விஷயத்தில் எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. அங்குள்ள மக்களும் இதை யார் செய்திருப்பார்கள் என சரியாக சொல்ல முடியவில்லை என்கின்றனர். வேங்கைவயலில் உடனடி நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை. சமீப காலங்களில் சாதி அடிப்படையில் அங்குள்ள மக்களுக்கு இடையில் சண்டை, சச்சரவு ஏதும் நடைபெறவில்லை. கோயிலுக்குள் நுழைய விட மறுப்பது, இரட்டை குவளை முறை பயன்பாடு என்பதெல்லாம் காலங்காலமாக தொடர்ந்து வரக்கூடிய ஒன்று. இதனால் குற்றம் செய்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இருப்பினும் சம்பவம் தொடர்பாக விசாரிக்க அந்த கிராமத்தை சேர்ந்த 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முதல்வரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

தற்போது ஆளுநருக்கு எதிராக 13ஆம் தேதி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வேங்கைவயல் சம்பவத்தை கண்டித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 18 அல்லது 19 தேதிகளில் தமிழகம் தழுவிய அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் உயர்நிலையில் குடிநீர் தேக்க தொட்டியில் மலத்தை கலந்து சாதி வெறி கொடுமையைச் செய்த குற்றவாளிகளை 15 நாட்களாகியும் கைது செய்யதது ஏன் என்று மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன் கேள்வி எழுப்பி உள்ளார். குற்றவாளிகளை கைது செய்ய அரசியல் கட்சிகள் தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்க அவர் கோரிக்கை விடுத்து இருக்கிறார். இதுகுறித்து மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்ரி திபேன் அவர் விடுத்து இருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமம் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில் வசித்து வரும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் ஆதிக்க சாதியினர் மலம் கலந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கடந்த 2022 டிசம்பர் 25 அன்று அக்கிராம மக்களுக்கு அடுத்தடுத்து திடீர் உடல்நலக் குறைவும், ஒவ்வாமையும் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குடிநீரில்தான் பிரச்னை என்று கூறியவுடன் கிராமத்தைச் சேர்ந்த சிலர், அவர்கள் பயன்படுத்திவந்த 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிப் பார்த்த போது மலம் மிதந்துகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

மாவட்ட ஆட்சியர், எஸ்பி விசாரணை இதையடுத்து 27.12.2022 அன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை உள்ளதையும், கோவில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதையும் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ சின்னதுரை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அடுத்து கோட்டாட்சியர் குழந்தைசாமி பாதிக்கப்பட்ட மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சம்பவம் நடந்து சுமார் 15 நாட்கள் கடந்த நிலையில் இது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஏன்? மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், மாநில மனித உரிமைகள் ஆணையம், மாநில பெண்கள் உரிமை ஆணையம் போன்றவை இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது ஏன்? அரசு சாரா அமைப்புகள் தான் இது பற்றி பேசி வருகின்றன. 21 ஆம் நூற்றாண்டிலும் சாதிய வன்மத்துடன் தொடரும் இக்கொடூரத்தை அரசியல் கட்சிகள் உடனடியாகக் கண்டனம் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இத்துடன் குற்றவாளிகள் கைது செய்யப்படவும், கிராமத்தில் அமைதியான சூழல் நிலவவும் அரசியல் கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுகிறோம். இச்சம்பவம் குறித்து ஒரு நீதிபதி தலைமையில் இரண்டு வழக்கறிஞர்கள் விசாரணை நடத்துவது பாராட்டிற்குரியது ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.