திருவையாறு வரும் ஆளுநர் ரவிக்கு பலத்த பாதுகாப்பு!

தியாகராஜர் ஆராதனை விழாவில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி வருவதை முன்னிட்டு திருவையாறில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சத்குரு தியாகராஜரின் சமாதி வளாகத்தில், தியாகராஜர் மறைந்த புஷ்ய பகுல பஞ்சமி திதியில் ‘ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபை’ சார்பில், ஆண்டுதோறும் இசை ஆராதனை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 176வது ஆண்டு ஆராதனை விழா கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. இந்த விழாவை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். விழாவில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை ஏராளமான இசைக்கலைஞர்கள் பாடியும், இசைத்தும் தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராதனை விழா இன்றைய தினம் நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விழாவை தொடக்கி வைக்கிறார். இன்றைய தினம் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாகசுரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பின்னர், காலை 9 மணி முதல் 10 மணி வரை ஏராளமான இசைக்கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியும், இசைத்தும் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தவுள்ளனர். அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையடுத்து, காலை 10 மணிக்கு நாதசுரம், 10.30 மணிக்கு விசாகா ஹரி குழுவினரின் ஹரி கதை, முற்பகல் 11 மணிக்கு தாமல் ராமகிருஷ்ணனின் உபன்யாசம் உள்பட பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இன்று இரவு 8 மணிக்கு தியாகராஜ சுவாமிகள் வீதி உலா நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. சட்டசபையில் நிகழ்ந்த சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவர்களும், அரசியல் கட்சியினரும் ஆளுநர் ரவிக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் திருவையாறு ஆராதனை விழாவில் பங்கேற்க வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழ்நாடு ஆளுநரின் வருகையையொட்டி தஞ்சை மற்றும் திருவையாறில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.